தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
“டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், தங்கள் விவரங்களை வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிச.19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த நடவடிக்கையானது, தகுதியான யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முந்தைய காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்று அணுகியபோதும் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள் அதாவது இறந்தவர்கள், கண்டறிய இயலாத, முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் என குறிக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை (ASD பட்டியல்கள்) தயாரித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் (BLAs) நடத்தப்பட்ட கூட்டங்களில் அவர்களுக்கு இப்பட்டியல் பகிரப்பட்டுள்ளது. இக்கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் பிஎல்ஓ செயலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏஎஸ்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் உண்மையான நிலையை உறுதி செய்துகொள்வதற்காகவும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பே ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை திருத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், இறந்தவர்கள், கண்டறிய இயலாத, முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் (ASD பட்டியல்கள்) இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் (DEO) இணையதளங்களில் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.