வட சென்னையின் மூத்த அரசியல்வாதியும், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளருமான வி.எஸ்.பாபு, தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
முன்னதாக வட சென்னை திமுக மாவட்டச் செயலாளராக பதவி வகித்த வி.எஸ்.பாபு, புரசைவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான அதிருப்தியின் காரணமாக அதிமுகவில் இணைந்த அவர், வட சென்னை வடக்கு–மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர். பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த வி.எஸ்.பாபு, விஜய்யை சந்தித்து நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். பின்னர், அவர் கூறுகையில், ‘‘அதிமுகவில் பழனிசாமி செயல்பாடுகள் பிடிக்காததால் தவெகவில் இணைந்தேன்’’ என்றார்.