சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 2 முறை அதிமுக தோற்றதே இல்லை. ஆனால் இம்முறை வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் 54 ஆண்டுகால வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்துள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்த தேர்தல்களில் வென்ற ஒரே கட்சி, தொடர்ந்து 3 முறை வென்று ஆட்சியில் தொடர்ந்த கட்சி, எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்வரை தோல்வியையே கண்டிராத கட்சி என்ற சாதனைகளை அதிமுக படைத்திருக்கிறது. மேலும், இக்கட்சி இதுவரை தொடர்ந்து 2 முறை தோற்காத அளவுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் கட்சியை நடத்தி வந்தனர்.
இதை தக்கவைக்க வேண்டிய மிகப் பெரிய கடமையும் பொறுப்பும் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு இருந்தது. அதை மனதில் வைத்து கட்சியை வழிநடத்தி வந்தார். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தொடங்கி, பல்வேறு தேர்தல்கள் அதிமுகவுக்கு தொடர்ந்து தோல்வி முகமாக இருந்து வருகிறது. இத்தோல்விக்கு பாஜக கூட்டணி காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிவைக்காமல் போட்டியிட்டும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறமுடியவில்லை.
இந்த இக்கட்டான சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பழனிசாமி இருந்தார். இதற்காக வியூக வகுப்பாளர்களை நியமித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதமே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கடந்த மார்ச் 15-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்போது, கிட்டத்தட்ட 170 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரத்தை முடித்திருந்தார்.
எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் புது வகையாக, பிரச்சாரத்தின்போதே பகுதி பகுதியாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தும் வந்தார். அவரைப் போன்று வேறு எந்த கட்சித் தலைவரும் இந்த அளவுக்கு தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.
இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக-வுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுக-வுக்கு 11 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட்டது. சசிகலா, டிடிவி தினகரன்,
ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காத பழனிசாமி, கட்சியிலிருந்து செங்கோட்டையனை நீக்கினார். கட்சி ஒருங்கிணைப்புக்கு சாத்தியமில்லை என்பதில் பழனிசாமி பிடிவாதமாக இருந்தார்.
பாஜகவின் முன்னெடுப்பால் டிடிவி தினகரனை மட்டும் ஏற்றுக்கொண்டார். ஓபிஎஸ், ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாயினர். அதேநேரம், கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவந்த பழனிசாமியால் பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இடையே நிலவிய பிளவை சரிசெய்ய முடியவில்லை.
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதையும் தவறவிட்டது. முதற்கட்டமாக பழனிசாமி அறிவித்த வேட்பாளர் பட்டியலில் 23 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தெற்கில், கொங்கு மண்டலத்தில் மற்றும் வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் முக்கிய சமூகத்தினராகவே இருந்தனர்.
ஜெயலலிதா காலத்தில், அதிக அளவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது போன்று இப்போது வழங்காததும், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இத்தகைய காரணங்களாலேயே இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்ததோடு, அக்கூட்டணி 3-ம் இடத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.