தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகத்தை அதிமுக நேற்று தொடங்கியது. இதையடுத்து விருப்பமனுவை வாங்குவதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்தில் குவிந்த நிர்வாகிகள். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: அதிமுக சார்பில் 2026 தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் சென்னையில் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை வாங்கிச் சென்றனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இதன்படி அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள், விருப்பமனு வழங்க ஏதுவாக விருப்பமனு விநியோகம் தொடக்க நிகழ்ச்சி, சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் இந்த விருப்பமனு விநியோகத்தை தொடங்கிவைத்தனர்.
பின்னர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்டு நேற்று மனுக்களை பெற்றனர். தமிழகத்தில் பொது மற்றும் தனி தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்களை பெற்றனர். புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ரூ.5 ஆயிரம் செலுத்தி பெற்றனர்.
ஒவ்வொரு நாளும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்பமனுக்கள் விநியோகம் நடைபெறும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் மேற்கூறிய நேரத்தில் தரலாம். விருப்பமனு விநியோகம் டிச.23-ம் தேதி வரை நடைபெறும்.
பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் தங்களுக்காகவும், தங்கள் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடவும் விருப்ப மனுக்களை பெற்றுச்சென்றனர். இந்த விருப்ப மனுவில் அதிமுகவில் எந்த ஆண்டிலிருந்து உறுப்பினராக உள்ளீர்கள், கட்சியில் தற்போது வகிக்கும் பதவி, சார்ந்த சமூகம், தமிழ் தவிர சரளமாக பேசத்தெரிந்த பிற மொழிகள், வெற்றி வாய்ப்பு விவரம், கட்சி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள், கட்சி போராட்டங்களில் சிறை சென்ற விவரம், நீதிமன்ற வழக்குகள் இருந்தால் அதன் விவரம் என்பன உள்ளிட்ட 25 கேள்விகள் இந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, நேற்று ஒரே நாளில் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் 349 பேர், தங்கள் தொகுதியில் பழனிசாமி போட்டியிட வேண்டும் என்றும், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி 888 பேரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.