ஓ.எஸ்.மணியன்

 
தமிழகம்

“தவெகவின் குதிரை பேரத்தை மறைக்க பழனிசாமி மீது அவதூறு பரப்புகிறார் ஆதவ் அர்ஜுனா” - ஓ.எஸ்.மணியன்

வெற்றி மயிலோன்

சென்னை: “அதிமுகவில் கருத்து வேறுபாடு உள்ள சிலரை அழைத்து அமைச்சராக்க, ஆட்சியை காப்பாற்ற தவெகவில் குதிரை பேரம் நடத்திவிட்டார்கள். அதனை மூடிமறைக்க பழனிசாமி மீது பல அவதூறான தகவல்களை ஆதவ் அர்ஜுனா சொல்லி வருகிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “ அதிமுகவையும், திமுகவையும் தொடர்புபடுத்தி ஆதவ் அர்ஜுனா பல அவதூறான செய்திகளை சொல்லி வருகிறார்.

ஆதவ் அர்ஜுனா அவருடைய அரசியல் காலத்தை முன்னே சென்று, எத்தனைக் கட்சிகள் மாறி வந்துள்ளார் என்று பார்க்க வேண்டும். விசிகவில் பணியாற்றினார், திமுகவில் இருந்தார். அதிமுகவிலும் இணைவதற்காக அவர் பேசினார், அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டார். அது மறுக்கப்பட்டதால், தவெகவில் இணைந்தார்.

ஆதவ் அர்ஜுனா சொல்லும் குற்றச்சாட்டை நாங்கள் 100 சதவீதம் மறுக்கிறோம். சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக ஆட்சியின் குறைபாடுகள் குறித்து எடுத்து வைத்துள்ளார். எழுச்சிப் பயணத்தில் மக்களை சந்தித்து திமுக அரசின் மோசமான நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாகவே 53 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றது. திமுகவை விமர்சித்ததுதான் எங்கள் வெற்றிக்கு காரணம். இதுவெல்லாம் தெரியாமல் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார்.

அதிமுகவில் கருத்துவேறுபாடு உள்ள சிலரை அழைத்து அமைச்சராக்க, ஆட்சியை காப்பாற்ற தவெகவில் குதிரை பேரம் நடத்திவிட்டார்கள். அதனை மூடிமறைக்க பழனிசாமி மீது பல அவதூறான தகவல்களை ஆதவ் அர்ஜுனா சொல்லி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT