சென்னை: சுபமுகூர்த்த தினமான ஆக.31-ம் தேதி அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளர் வெளியிட்ட அறிக்கை: ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான ஆக.31-ம் தேதி அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, ஆக.31-ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.