கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு கோயிலில் என்ன வேலை? என்று சிதம்பரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக கொள்கைபரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா கேள்வி எழுப்பினார்.
சிதம்பரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா பேசியதாவது: திமுக அரசு சிதம்பரம் கோயில் சொத்துகளையும் நிர்வாகத்தையும் உரிமைகளையும் பறிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்து அறநிலையத்துறை ஸ்டாலின் வீட்டு சமையல் அறையாக மாறியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் முருகருக்கு எதிராக நீதிமன்றம் சென்றனர். அடுத்த நாளே அந்த கோயில் அருகே ஸ்டாலின் கார் டயர் வெடித்தது. சிதம்பரம் கோயிலை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். ‘கடவுளே இல்லை’ என்று சொல்பவர்களுக்கு கோயிலில் என்ன வேலை? தமிழகத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் சண்டையில்லை. இந்து - முஸ்லிம் இடையே சண்டை இல்லை. ஆனால் அத்தனை சண்டைகளையும் திமுக உருவாக்க பார்க்கிறது.
மக்களுக்கான பிரச்சினையை பேசாமல், எப்போதும், ‘தமிழ்நாட்டுக்குள் பாஜக வந்துவிடும்; பாஜக வந்து விடும்’ என்றே திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதைச் சொல்லியே பூச்சாண்டி காட்டுகின்றனர். இந்தத் தேர்தல் நல்லசக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடைபெறும் தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.