தமிழகம்

100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த நடவடிக்கை: மத்திய அரசின் முயற்சிக்கு பழனிசாமி வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாட்களாக அதிகரிக்க எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இன்றைய முதல்வர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். ஊதியமும் உயர்த்தப்படும்” என்று அறிவித்திருந்தார்.

மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அவர் பதிவிட்டிருந்த நீண்ட எக்ஸ் தள பதிவில் ஏன் இதை பற்றி எந்த குறிப்பும் இல்லை, இது போன்ற பச்சை துரோகத்தை செய்துவிட்டு பச்சை துண்டு பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன். எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT