சென்னை: தமிழகத்தில் 14 முக்கிய பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இன்றி, ஆதரவற்ற நிலையில் கிடக்கின்றன.
இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகரிடம், அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநரிடம் ஏபிவிபி அமைப்பின் மத்திய செயலாக்க குழு உறுப்பினர் வேதாஞ்சலி உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திமுக அரசின் திட்டமிட்ட சதியால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் இன்று ஆளுங்கட்சியின் சித்தாந்தக் கூடாரங்களாகவும், பாலியல் குற்றவாளிகளின் பாதுகாப்பான புகலிடமாகவும் சீரழிந்துள்ளன.
அண்ணா பல்கலை. பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு, பனிப்பாறையின் ஒரு நுனி மட்டுமே. திமுக பின்னணி கொண்ட பாலியல் குற்றவாளியின் குற்றங்களை, பல்கலை. நிர்வாகங்களே மூடிமறைத்துப் பாதுகாக்கின்றன. மாணவிகளுக்கு இங்கு பாதுகாப்பில்லை.
ஆளுநர் உடனான முரண்பாட்டால் 14 முக்கிய பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இன்றி, ஆதரவற்ற நிலையில் கிடக்கின்றன. திமுக அரசு திட்டமிட்டு, நிதியை முடக்கியுள்ளது.
ஆளுநர் இதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் மாணவர் சமுதாயத்தை திரட்டி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.