சென்னை: மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளர்கள் பற்றக்குறையால், வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.
மாதவரம் பால் பண்ணையில் இருந்து வடசென்னை பகுதி முழுவதும் ஆவின் பால் விநியோகம் செய்யப்படுகிறது.
வடசென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக, ஆவின் பால் விநியோகம் குறைவாக இருந்ததால், பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைக்கவில்லை. கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுவதால், பொதுமக்கள் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், வடசென்னை பகுதியில் ஆவின் பால் விநியோகம் நேற்று கடுமையாக பாதிப்படைந்தது. பெரம்பூர், திருவிக நகர், வியாசர்பாடி, கொளத்தூர், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
குறைந்த அளவிலேயே பால் விநியோகம் செய்யப்பட்டதால், கடைகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பால் பாக்கெட்கள் வழங்கப்பட்டதாக பால் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
மாதவரம் பால் பண்ணையில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கு, சரியான நடவடிக்கை எடுக்காமல் போனதே இந்த பாதிப்புக்கு காரணம் என, தமிழக பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரருக்கே மாதவரம் பால் பண்ணைக்கான ஒப்பந்தம் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரரால் மாதவரம் பால் பண்ணையில் பணிக்கு தேவையான சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்ப இயலவில்லை.
வெறும் 8 பேரை மட்டுமே அனுப்ப முடிந்தது. கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக, ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு வராததால் வெறும் 8 தொழிலாளர்களை கொண்டு மாதவரம் பால் பண்ணை இயங்கி வந்தது.
இதனால், பால் முகவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆவின் பாலை தங்குதடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மொத்த விநியோகஸ்தர்களின் வாகன ஓட்டுநர்களும், வாகன உதவியாளர்களும் பால் பாக்கெட்டுகளை பால் டப்புகளில் அடுக்கி வாகனங்களில் ஏற்றும் பணிகளை தொடர்ந்து செய்தனர்.
ஆனால், தொழிலாளர்கள் பற்றாகுறையை சரிசெய்ய ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்தும், ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரத்தில், வாகன ஓட்டுநர்கள், வாகன உதவியாளர்கள் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை.
இதையடுத்து, மாதவரம் பால் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆவின் பால் விநியோகம் சுமார் 60 சதவீதத்துக்கும் மேல் முடங்கியது.
இதனால், ஆவின் பால் கிடைக்காமல் வடசென்னை பகுதி பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மாதவரம் பால் பண்ணையில் நிலவும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.