“திமுக-வுடன் நல்ல நட்புறவு தொடர்ந்து கொண்டிருப்பதால் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அங்கீகாரம் கொடுப்பார் என எதிர்பார்க்கிறோம்” என ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி விட்டு நேற்று சென்னை திரும்பிய வசீகரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி நிச்சயமாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும். எங்களை அழைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
திமுகவுடன் நல்ல நட்புறவு தொடர்வதால் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அங்கீகாரம் கொடுப்பார் என எதிர்பார்க்கிறோம். தென்னிந்தியாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகம் மூலம் ஒரு வாய்ப்பு அமைய உள்ளது. அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எங்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டால், எங்களுடையை துடைப்பம் சின்னத்திலேயே போட்டியிடுவோம். தமிழகத்தில் ஆம் ஆத்மி போட்டியிட்டால் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் உள்ளிட்டோர் பிரசாரம் செய்வதற்கு வருவார்கள். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.
பாஜக அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகளை விழுங்கி கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும் அதை செய்ய ஆரம்பித்து விட்டனர். இதை தடுக்க வேண்டும். அரசியல் என்பது சுலபமானது அல்ல. யாரும் எடுத்தவுடன் முதல்வராகி விடமுடியாது. அரசியல் எவ்வளவு கஷ்டமானது என்பது தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோருக்கும் தெரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.