தமிழகம்

பயிர்க் கடன் தள்ளுபடி முதல் மின்வெட்டு பிரச்சினை வரை: தேமுதிக 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அனலி

சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி, மின்வெட்டுக்கு தீர்வு, விஜயகாந்துக்கு ‘பாரத ரத்னா’ உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:

தீர்மானம் 1: தமிழக விவசாயிகளின் துயரத்தையும் கடன் சுமையையும் கருத்தில் கொண்டு, தகுதியான அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 2: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை வேரோடு அழிக்கவும், மதுபானப் பயன்பாட்டால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு உடனடியாகவும், கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 3: தமிழக அரசு விவசாயிகளின் நெல்லை நேரடியாகவும், உரிய விலையிலும், தாமதமின்றியும் கொள்முதல் செய்து, அதற்கான தொகையை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். மேலும், அனைத்து பகுதிகளிலும் போதுமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, இடைத்தரகர்களின் தலையீட்டைத் தடுக்க வேண்டும்.

தீர்மானம் – 4: தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை இனியும் வேடிக்கை பார்க்காமல், உடனடியாக கட்டுப்படுத்தி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் - 5: தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக மின் வெட்டைத் தடுத்து, தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் - 6: காவேரி தண்ணீர் கடைமடை வரை சென்றடையவில்லை தூர் வாராததால் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஏரி, ஆறு கால்வாய் தூர்வாரப்பட வேண்டும். மேலும் மழைநீர் வடிகால் திட்டத்தை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..

தீர்மானம் – 7: தமிழக அரசின் திட்டங்கள் மக்கள் எதிர்ப்பு இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் திட்டங்களை தலைமைச் செயலகமாக இருந்தாலும் புதிய ஏர்போர்ட் ஆக இருந்தாலும் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.

தீர்மானம் – 8: காலங்களில் பண்டிகை அரசு போக்குவரத்து மக்கள் தேவைக்கேற்ப பேருந்துகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் தனியார் பேருந்துகள் கட்டணங்களையும் நிர்ணயம் செய்து கட்டணங்கள் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும்.

தீர்மானம் 9: விஜயகாந்த் கலைத்துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக 157 படங்களில் நடித்தவர். கலைஞர்களை சினிமாத்துறையில் உருவாக்கியவர். அரசியல் வாழ்க்கையில் நேர்மையாகவும், லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு தமிழகத்தை உருவாக்க வேண்டும் என பாடுபட்டவர். எனவே மத்திய அரசு கேப்டன் அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT