சென்னை: சென்னையில் 3,000 செல்போன் டவர்களுக்கான வாடகை பெறுவோருக்கு புதிய முறையில் சொத்து வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி தனது சொந்த வருவாயை உயர்த்த இந்த முடிவை எடுத்துள்ளது.
நகர்புறங்களில் பெரும்பாலும் வீடுகளின் மாடியில்தான் செல்போன் டவர் இருக்கும். இந்த டவர்களை நிறுத்த சம்பந்தபட்ட நிறுவனங்கள் அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்த வேண்டும். இப்படி செல்போன் டவர்களுக்கு தங்களின் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும்.
அந்த வகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 3,000 செல்போன் டவர்கள் உள்ளன. இந்த டவர்களுக்கு சென்னை மாநகராட்சி மாநகராட்சியின் பழைய வரிவிதிப்பு முறையின்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட்டு வந்தது.
ஆதாவது, அனைத்து செல்போன் டவர்களுக்கும் அரையாண்டுக்கு ரூ.15,000 சொத்து வரி விதிக்கப்பட்டு வந்தது. இதன்படி, செல்போன் டவர் வைக்க அனுமதி அளித்தவர்கள் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30,000 செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறையை மாற்றி புதிய முறையில் செல்போன் டவர்களுக்கு வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் செல்போன் டவர்களுக்கான வாடகை ஒரு இடத்தில் குறைவாகவும், ஒரு இடத்தில் அதிகமாகவும் இருக்கும். அனைவருக்கும் ஒரே தொகையாக அல்லாமல் இனி உரிமையாளர்கள் செல்போன் டவருக்காக பெறும் வாடகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சொத்து வரியாக வசூலிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டு அனைவருக்கும் புதிய சொத்து வரி நோட்டீஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்குள் புதிய சொத்து வரியை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்