திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுக்கத் தவறியதாகக் கூறி திருப்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைய முயன்ற விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு, கத்தாங்கன்னி, நாச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தார் தொழிற்சாலைகள், ரெடிமிக்ஸ் ஆலைகள், கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பல மடங்கு கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால் பல கோடி செலவில் போடப்பட்டுள்ள தார்சாலைகள் சேதமடைவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும் ஏற்கெனவே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது சொத்துக்களான சாலைகள் அழிக்கப்படுவதைத் தடுக்கத் தவறியதால் நாங்களே குற்றவாளிகள் எனக்கூறி பெருந்தொழுவு, நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய முயன்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட 80 பேரை திருப்பூர் தெற்கு போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.