ஈரானில் இருந்து திருநெல்வேலி திரும்பிய மீனவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. | படம்: மு.லெட்சுமி அருண் |
திருநெல்வேலி: ஈரானில் நடைபெற்று வரும் போர் சூழலில் சிக்கித் தவித்த நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மீனவர்கள் 80 பேர் நேற்று ஊர் திரும்பினர்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் ஈரான், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற சூழல் காரணமாக ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் தங்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வீடியோ மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
மீனவர்களின் உறவினர்களும் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ச்சியாக மனு அளித்தனர்.
அதன் பலனாக மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகம் இணைந்து முதல் கட்டமாக ஈரானில் தவித்து வந்த 345 இந்திய மீனவர்களை மீட்டு சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து மூலம் மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 80 பேர் நேற்று ஊர் திரும்பினர்.
அவர்களுக்கு பாஜக அயலக தமிழர் பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பாஜக தலைவர் முத்து பிரவேசம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.