சென்னை: தமிழகத்தில் பிரத்யேகமாக 65 போதைப் பொருள் தடுப்புப் படை காவல் நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக விஜய் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் 2 மாதங்களில் 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டம்தோறும் சிறப்புப் படை ஆகிய 3 வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கோப்புகளில் விழா மேடையிலேயே முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, தமிழகத்தில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை தடுத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 65 போதைப் பொருள் தடுப்பு காவல் நிலையங்கள் பிரத்யேகமாக அமைக்கப்படுகின்றன. அதாவது மாவட்டத்துக்கு ஒரு போதைப் பொருள் தடுப்பு காவல் நிலையம் வீதம் 37 போதைப் பொருள் தடுப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அது தவிர 9 காவல் ஆணையரகங்களிலும் 28 காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கவே இந்த காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இந்த புதிய படை இயங்கும். இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் முதல்வர் விஜய் கையெழுத்திட்ட 3 அறிவிப்புகள் தொடர்பாகவும் அடுத்தடுத்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.