சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 6.48 லட்சம் விண்ணப்பங்கள் புதிதாக பெறப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காலகட்டத்தில் ரூ.273.71 கோடி மதிப்புள்ள ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, கடந்த ஜன.1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, சிறப்புத் தீவிர திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்.23-ம் தேதி வெளியிடப்பட்டது.
அன்றிலிருந்து கடந்த 26-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்புக்காக 6 லட்சத்து 48,285 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் 2 லட்சத்து 89,581, பெண்கள் 3 லட்சத்து 58,500 மற்றும் 3-ம் பாலினத்தவர் 204 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
அதிகபட்சமாக சோழிங்கநல்லூர- 17,476, மாதவரம் - 10,790, கவுண்டம்பாளையம் - 10,123 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான வரும் ஏப்.6-ம் தேதி அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.
இப்பட்டியலில் தகுதிவாய்ந்த அனைத்து வாக்காளர்களும் சேர்க்கப்படுவர். சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியலானது, ஒரு ‘ஒருங்கிணைந்த பட்டியலாக’ இருக்கும்.
தொடர் திருத்தக் காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் சேர்க்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து தனித்தனியாக பட்டியல்கள் வெளியிடப்படுவதில்லை.
மாறாக, அனைத்து வாக்காளர்களும் ஒரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவர், மேலும் அப்பட்டியலே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும்.
மேலும், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
அந்த வகையில், நேற்று காலை நிலவரப்படி, ரூ.44.89 கோடி ரொக்கம், ரூ.93 லட்சம் மதிப்பு மதுபானங்கள், ரூ.7.60 கோடி மதிப்பு போதைப்பொருட்கள், ரூ.116.07 கோடி மதிப்பு தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள், ரூ.104.30 கோடி மதிப்பு இலவசங்கள், பரிசுப்பொருட்கள் என ரூ.273.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.