கோப்புப் படம்
கும்பகோணம்: திருவிடைமருதூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்த 6 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரை அடுத்த குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவது குறித்து நேற்று மது வாங்கச் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக டாஸ்மாக் மேலாளர் ஐஸ்வர்யா விசாரணை நடத்தினார். இதில், நிர்வாக நலனுக்கு குந்தகம் மற்றும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதன் காரணமாக, அந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், சேகர், சரவணன், விற்பனையாளர்கள் துரைபிரகாஷ், மதியழகன், வீராச்சாமி ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.