இறந்த யானைக் குட்டியின் சடலத்துடன் தாய் யானை மூன்றாம் நாளாகப் பாசப் போராட்டம் நடத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வனச்சரகத்திலுள்ள கொச்சிக்குன்னு பகுதியில் தனியாா் எஸ்டேட் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 3 தினங்களாக மூன்று யானைகள் முகாமிட்டிருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
வனத்துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது யானைக் குட்டி இறந்து கிடப்பதும், அதனைப் பிரிய முடியாமல் தாய் யானை அந்த இடத்தில் நிற்பதும் தெரியவந்தது. மேலும், கூட்டத்திலுள்ள அனைத்து யானைகளும் அங்கேயே முகாமிட்டிருந்ததும் தெரியவந்தது.
யானைகளை விரட்டிவிட்டு குட்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்ய வனத்துறையினர் முயன்றனர். ஆனால், வனத்துறையினரை நெருங்கவிடாமல் தாய் யானை ஆக்ரோஷத்துடன் இருந்ததால் குட்டியை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குட்டியின் சடலத்துடன் தாய் யானை அதே இடத்தில் நின்று பாசப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதற்குத் துணையாக கூட்டத்திலிருந்த யானைகள் அருகிலேயே முகாமிட்டுள்ளதால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
தவறவிடாதீர்