விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (பிப்.19), முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக விளக்கம் அளித்துப் பேசியதாவது:
"டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதை ஏற்று, அண்மையில் தலைவாசல் கூட்ரோடு அருகில் புதிய கால்நடை பூங்கா தொடக்க விழா நிகழ்ச்சியில், நான் பேசும்போது, டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.
இது சம்பந்தமாக, சட்ட நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட உடனே, இதற்குண்டான பணிகள் எல்லாம் தொடங்கப்பட்டுவிட்டன. சரியான முறையிலே சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்துதான் இதைக் கொண்டு வர முடியும். ஏன் என்றால் இதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.
சட்ட வல்லுநர்களுடன் விவாதித்து, சட்டப்பேரவையின் மூலமாக இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட நாங்கள் முயற்சி எடுக்கின்றோம்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
தவறவிடாதீர்!