தமிழகம்

ஓபிஎஸ் மீது பதியப்பட்ட 4 தேர்தல் வழக்கு ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை காவல் நிலையங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது.

          

அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி, ‘‘தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகார் அளிக்காத நிலையில், காவல்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஒரு வழக்கில் காலதாமதமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, 4 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT