புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த மாநாட்டை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார்.
தென் மாநில முதல்வர்கள் மாநாடு சென்னை கோவளத்தில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது.
மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் அந்தமான் - நிக்கோபார துணை நிலை ஆளுநர், லட்சதீவு அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
அனைத்து தென் மாநிலங்களுக்கும் முதல்வர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வரை மட்டும் அழைக்காமல், மாநில நிர்வாகியாக உள்ள துணை நிலை ஆளுநரையும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு செல்லாமல் புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். அதேநேரத்தில் மாநாட்டில் புதுவை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்றுள்ளார்.
மாநில உரிமையை நிலை நாட்டவே முதல்வர் ரங்கசாமி தென் மாநில முதல்வர்கள் மாநாட்டினை புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.