

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டல முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வகையில் இன்று (புதன்கிழமை) இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார்.
இந்த மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள அமித் ஷா, இந்த ஓட்டலில் இன்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். அதற்காக கோவளம் வந்துள்ள அவரை, முதல்வர் விஜய் சந்தித்து வரவேற்றார்.
கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது தவெக. இதையடுத்து காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அவர் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பது இதுவே முதல் முறை. இதனால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) அமித் ஷா தலைமையில் நடைபெறும் தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவைப் பலப்படுத்துவது, நீர்வளப் பகிர்வு, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் பங்கேற்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.