சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது.
சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும் அமித் ஷாவை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.
இதன்படி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் எனவும் அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் கூறியது என்ன?
செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “அதிமுக நிச்சயமாக 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. திமுக தலைவர், அதன் கூட்டணி தலைவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் டெல்லி சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வர் ஸ்டாலினுக்கு வாடிக்கை உள்ளது. நான் டெல்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி உணர்வுபூர்வமான கூட்டணி. இன்று இரவுக்குள் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஓதுக்கீடு செய்வது குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்கள் கூட்டணி இதில் தெளிவாக உள்ளது” என்றார்.