படம்: சத்யமூர்த்தி
சென்னை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (ஜன.3) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குன்னூரில் 26 செ.மீ அதிகனமழை பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (ஜன.3) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 4, 5 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 6 முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜன.6-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 26 செ.மீ, தென்காசி மாவட்டம் கடனா அணையில் 24 செ.மீ, சிவகிரியில் 17 செ.மீ, தேனி மாவட்டம் வீரபாண்டி, தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் தலா 12 செமீ, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 11 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.