சென்னை: டாஸ்மாக் கடைகளில் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 4,000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளும், பீர், ஒயின் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன. 7 மதுபான ஆலைகளிடம் இருந்து பீர் வகைகள், ஒரு ஆலையிடம் இருந்து ஒயின், 11 ஆலைகளிடம் இருந்து இதர மது வகைகளை டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 மது வகைகள், 40 பீர் வகைகள், 4 ஒயின் வகைகள் மற்றும் பிற மாநில மதுபானங்களில் 6 மது வகைகள், 5 பீர், 5 ஒயின் வகைகள் விற்கப்படுகின்றன. 538 வெளிநாட்டு ரக மது வகைகளை டாஸ்மாக் நிறுவனம் இறக்குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை செய்கிறது.
டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய மது வகைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், புதிய மது வகைகளை அறிமுகம் செய்வது தொடர்பாக மதுபான உற்பத்தியாளர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 25 புதிய மது வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது, “டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானம், பீர் விற்பது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 25 புதிய மது வகைகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மதுக்கடைகளில் புதிய வகை மதுபானங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.