தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக பிஎல்ஓ-கள் வீடுவீடாகச் சென்று பெறப்பட்ட படிவங்களை சரிபார்த்து பதிவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட முதன்மை கள செயல்பாட்டாளர்களாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) செயல்படுகின்றனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள வாக்காளர்களுடன் தினசரி தொடர்பு கொண்டு, தேர்தல் நிர்வாகத்துக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான நேரடி இணைப்புப் பாலமாக இவர்கள் பணியாற்றுகின்றனர்.
மொத்தமுள்ள 68,467 பிஎல்ஓ.களில், 2,488 பிஎல்ஓ.கள் தங்களது வாக்குச்சாவடி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகம், சேகரிப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் உள்ளீடு செய்து 100 சதவீதம் பணிகளை முடித்துள்ளனர்.
இவர்களின் சிறப்பான செயல்பாட்டுக்காக இவர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கவுரவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.