தமிழகம்

தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - முழு விவரம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வணிக வரி, பதிவு, அறநிலையத் துறை செயலராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக (டிட்கோ) தலைவராக இருந்த சந்தியா வேணுகோபால் சர்மா இப்போது திட்டம், வளர்ச்சித் துறைக்கும், சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் ஜெ.குமரகுருபரன் இப்போது வணிகவரி, பதிவு, அறநிலையங்கள் துறைக்கும், அறநிலையத் துறை செயலராக உள்ள எஸ்.ஸ்வர்ணா இப்போது சுற்றுலா, கலாச்சாரம், சிறப்பு முயற்சிகள் துறைக்கும் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி இப்போது தொழில் துறை சிறப்பு செயலராகவும், சிஎம்டிஏ முன்னாள் உறுப்பினர் செயலர் ஜி.பிரகாஷ் இப்போது வருவாய் நிர்வாக ஆணையரக கூடுதல் ஆணையராகவும், எழுதுபொருள் அச்சகத் துறை ஆணையர் வி.ஷோபனா இப்போது துணி நூல் துறை ஆணையராகவும், வணிக வரி, பதிவுத் துறை செயலராக உள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ் இப்போது தொழிலாளர் ஆணையராகவும், போக்குவரத்து துறை ஆணையர் கிரன் குராலா, நகர ஊரமைப்பு ஆணையராகவும், விடுப்பில் இருந்து திரும்பிய கே.விஜயகார்த்திகேயன் இப்போது மீனவள இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கைத்தறித் துறை இயக்குநர் மகேஷ்வரி ரவிகுமார் இப்போது சமூக நல இயக்குநராகவும், சிப்காட் மேலாண் இயக்குநர் கே.செந்தில்ராஜ் இப்போது ஆதிதிராவிடர் நல இயக்குநராகவும், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்ட இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன் இப்போது போக்குவரத்து துறை இயக்குநராகவும், விடுப்பில் இருந்து திரும்பியுள்ள டி.சாருஸ்ரீ இப்போது கருவூலம், கணக்குத் துறை இயக்குநராகவும், கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜி.ரவிக்குமார் இப்போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆஷா அஜித் இப்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற இயக்குநராகவும், டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர் டி,கிறிஸ்துராஜ் இப்போது நில அளவைத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் செயலர் டி.கார்த்திகேயன் இப்போது டிட்கோ தலைவராகவும், சென்னை குடிநீர் வாரிய முன்னாள் மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் இப்போது தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண் இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த எஸ்.அனீஷ் சேகர் இப்போது தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக முன்னாள் மேலாண் இயக்குநர் ஆர்.வி.சஜீவனா இப்போது தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்ட இயக்குநராகவும், தொழிலாளர் ஆணையராக இருந்த எஸ்.ஏ.ராமன் இப்போது சிப்காட் மேலாண் இயக்குநராகவும், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் ஆணையர் லலித் ஆதித்யா நீலம் இப்போது சேலம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT