சென்னை: காய்ச்சல், சளி பிரச்சினைகளுக்கான 205 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
ஆய்வின்போது, தரமற்ற மற்றும் போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், காய்ச்சல், சளி, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 205 மருந்துகள் தரமற்ற வையாகவும், 2 மருந்துகள் போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.