

மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கடற்கரைகளின் தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து சர்வதேச அங்கீகாரத்துக்கான நீலக்கொடி சான்றிதழை அளித்துவருகிறது.
தமிழகத்தில் ஏற்கெனவே கோவளம் கடற்கரைக்கு அந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில், உலகின் 2-வது பெரிய கடற்கரை மற்றும் இந்தியாவின் மிக நீளமான சுமார் 13 கிமீ தூரமுடைய மெரினா, திருவான்மியூர் உள்ளிட்ட 6 கடற்கரைக்கும் நீலக்கொடி சான்றிதழ் பெற தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மெரினா கடற்கரையில் ரூ. 5.60 கோடியில் இரும்பு நடைபாதை, சைக்கிள் தடங்கள், விளையாட்டு பகுதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பாதை, நிழற்குடைகள், விளையாட்டு சாதனங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், சுழலும் கண்காணிப்பு கேமராக்கள், கடற்கரைக்கு மெருகூட்டும் மரங்கள், இருக்கைகள், குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியில் மெரினாவில் உள்ள நடைபாதை கடைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மெரினாவில் தனக்கும் கடை ஒதுக்கக்கோரி தேவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார். பி.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர், மாநகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை தெளிவற்ற நிலையில் இருப்பதாகக் கூறினர்.
இதையடுத்து, நீதிபதிகள் மெரினாவில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போதுமாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், காவல் ஆணையர் ஏ.அருண் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது நீதிபதிகள், மெரினாவின் உள்கட்டமைப்பு தொடர்பான வரைபடத்தை ஆய்வு செய்து கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும், இந்த கடைகள் எக்காரணம் கொண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கக்கூடாது என்றும், பொதுமக்கள் சுதந்திரமாக கடல் அழகை கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், இந்தியாவின் பெருமையாக கருதப்படும் மெரினாவுக்கு நீலக்கொடி அந்தஸ்து கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். பின்னர் இது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.