சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில் இரும்பு தகட்டை வைத்து, வாடிக்கையாளர்கள் பணத்தை நூதன முறையில் திருட முயன்ற வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, வியாசர்பாடி, பல்லவா 3-வது தெருவில் வங்கி ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஏசி இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சரி செய்வதற்காக, நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட வங்கி அனுப்பிய ஊழியர்கள் இருவர் வந்தனர்.
அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில் மெல்லிய இரும்பு தகடு கொண்டு அடைத்து வைத்திருந்ததை பார்த்த அவர்கள், ஏடிஎம் வெளியே சந்தேக நபர்கள் யாரேனும் உள்ளார்களா என நோட்டமிட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவர் சிறிது நேரம் கழித்து ஏடிஎம் மையத்திற்கு வந்து பணம் எடுப்பது போல் நடித்ததை பார்த்து சந்தேகமடைந்த ஊழியர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, அவர்களை பிடித்து வைத்துக் கொண்டனர். வியாசர்பாடி போலீஸார் சம்பவ இடத்து வந்து அந்த நபர்களிடம் விசாரித்தனர்.
அவர்கள் உத்திரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரபகதூர் (23), அமர்சிங் (30) என்பதும், இவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை வந்து வால்டாக்ஸ் சாலையில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரிந்தது.
மேலும், இவர்கள் சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தை நோட்டமிட்டு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில் தகடு வைத்து தடுத்து, பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் பணம் வரவில்லை என நினைத்து திரும்பி சென்ற உடன் தகடை அகற்றி பணத்தை திருடி செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் தகடு, டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் வேறு எங்கேனும் இது போன்று கைவரிசை காட்டியுள்ளனரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.