தூத்துக்குடி / திருநெல்வேலி: தூத்துக்குடி, திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றபோது, மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, தவெக தலைவர் விஜய் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார்.
காலை 11.45 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பிரச்சார வேனில் ஏறிதிருநெல்வேலி நோக்கி விஜய் புறப்பட்டார்.
அவரது வேனை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்களை போலீஸார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். வாகைகுளம் சந்திப்பு பகுதியில் சென்றபோது, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் விஜய்க்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் மீண்டும், திருநெல்வேலி நோக்கி புறப்பட்டபோது, வாகைகுளம் பகுதியில் இருந்து தொண்டர்கள் மோட்டார் சைக்கிள்களில் விஜய் சென்ற பிரச்சார வேனை பின்தொடர்ந்து சென்றனர். ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயன்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
கீழே விழுந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் லேசான காயமடைந்தனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே விஜய்யின் வாகனம் திரும்பியபோது கட்சி தொண்டர்கள், தடுப்புகளை மீறி வாகனத்தின் பின்னால் ஓடினர்.
அப்போது, காவல் துறையினர் சாலையில் தடுப்புகளை வைத்து மறித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் மாட்டிக்கொண்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தபோது, சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, சாலையை கடக்க முயன்ற பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர் மீது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதியது. இதில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த இன்ஸ்பெக்டர் கோகிலா அவரை மீட்டு தனது சொந்த வாகனத்தில் ஏற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய்யின் வேனை பின்தொடர்ந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் பொட்டல் பகுதியில் 6 பேர் காயமடைந்தனர். நாரணம்மாள் புரத்தில் 2 பேர் காயமடைந்தனர். இதன்படி மொத்தம் 16 பேர் காயமடைந்தனர்.