சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்தில் 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வை வெளிப்படை தன்மையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் நிர்மல் குமாருக்கு பொறியாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கூறியதாவது: மின்சார வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாக பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்திவந்த 300 ஊழியர்களுக்கு, உடனடியாக செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற பிரிவுகளிலும் நிலுவையில் உள்ள பதவி உயர்வு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
பணிச்சுமையை குறைக்கும் வகையில், முதல்கட்டமாக 15 ஆயிரம் பணியாளர்களை புதிதாக வேலைக்கு எடுப்பதற்கான வரைவு அறிக்கை தயாராகி வருகிறது. முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த ஆண்டிலேயே இந்தப் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகப் பணியிடங்களாக இல்லாமல், அரசுப் பணியிடங்களாக நிரப்பப்படும்.
தமிழகத்தில் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. உபரியாக உள்ள மின்சாரத்தை மத்தியதொகுப்புக்கு விற்று மின்சாரவாரியம் வருவாய் ஈட்டி வருகிறது. சென்னையில் நிலவும் லோ-வோல்டேஜ், மின்வெட்டு பிரச்சினைகளுக்கு, 20 ஆண்டுகள் பழமையான மின்மாற்றிகள், கம்பிகள் சேதமடைவதே காரணம். இதை சரிசெய்ய கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு பழுதுசரிசெய்யப்படுகிறது.
மேலும், ஒரு சில பகுதிகளில் திட்டமிட்டே மின்சாரப் பெட்டிகளில் உள்ள ஃபியூஸ் (Fuse) பிடுங்கப்பட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுவது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.