சென்னை: தமிழகத்தில் நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குடியிருப்புகளில் வசிப்போர் சிலர் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க தயக்கம் காட்டுகின்றனர். பல இடங்களில் இதுபோன்ற குடியிருப்புகளில் 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
அங்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கும் அளவுக்கு வாக்காளர்கள் இருப்பதால், இதுபோன்ற அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக ஆலோசித்து வந்தது.
அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த தேர்தலில் 15 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைக்கிறது. அதன் அமைவிடங்களையும் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, மதுரவாயல் தொகுதியில் நெற்குன்றத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வசிக்கும் தாய்ஷா (TAISHA) அடுக்குமாடிக் குடியிருப்பிலும், அம்பத்தூர் தொகுதியில் கொரட்டூரில் உள்ள அலையன்ஸ் ஆர்கிட் ஸ்பிரிங்ஸ் குடியிருப்பில் 2 வாக்குச்சாவடிகளும், திருவொற்றியூர் தொகுதியில் எர்ணாவூரில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.
மேலும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தண்டையார்பேட்டை இளைய தெருவில் உள்ள பிரின்ஸ் அபார்ட்மென்டில் 2 வாக்குச்சாவடிகள், வில்லி
வாக்கம் தொகுதியில் திருமங்கலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், விருகம்பாக்கம் தொகுதியில் கோயம்பேட்டில் உள்ள தெற்காசிய போட்டிகள் ஒருங்கிணைப்பாளர்கள் குடியிருப்பில் 2 வாக்குச்சாவடிகள், வேளச்சேரி தொகுதியில் டான்சி நகரில் உள்ள புனித ஆண்டனி தொடக்கப் பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மாங்காட்டில் உள்ள ஆதாம் குடியிருப்பு, கீழ்கதிர்ப்பூரில் உள்ள வீட்டுவசதித் துறை கட்டிடவளாகம் ஆகியவற்றில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படஉள்ளன. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கீரப்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 2 வாக்குச் சாவடிகள், மதுரை மேற்கு தொகுதியில் கோச்சடை பகுதியில் உள்ள சாந்தி சதன் அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகிய 15 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.