தமிழகம்

தூய்மைப் பணியாளர்களை கடைநிலை அரசு ஊழியராக்கக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை கடைநிலை அரசு ஊழியராக்கக் கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் இன்று தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்கம் சார்பில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை முழுநேர கடைநிலை அரசு ஊழியராக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்னமயில் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நாகலட்சுமி, முன்னிலை வகித்தார்.

கரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு 28-05.2021 அரசாணைப்படி ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத்திலுள்ள பாகுபாடுகளை களைந்து பணிக்காலத்தின்படி ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில துணைத் தலைவர்கள் குருநாதன், சடையன், துணைப் பொதுச் செயலாளர்கள் திலகவதி, கருப்பசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட நிர்வாகிகள் ராஜலெட்சுமி, முனியாண்டி, ராதா, சந்தனகருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் மாநில பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
-

SCROLL FOR NEXT