சென்னை: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக ரூ.40 கோடியில் தரம் உயர்த்தும் பணி முடிவுற்று விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரைவையில் கேள்வி நேரத்தில், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் பேசும்போது, “தோகமலை ஒன்றியம் அ.உடையாப்பட்டி துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்தில் இன்னும் 4200-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் தேவைப்படுகின்றன. முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
குளித்தலை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரமுயர்த்தும் பணி ரூ.40 கோடியில் நடைபெற்று வருகிறது. அங்கு 230 படுக்கை வசதிகளுடன் 1,09,125 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 4 தளங்கள் கொண்ட கட்டிடப் பணிகள் 90 சதவீதம் முடியும் தருவாயில் உள்ளன. மேலும், அந்தக் கட்டிடத்துக்கு தேவையான கூடுதல் வசதிகளை நிதி ஆதாரத்துக்கு ஏற்ப, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.