கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நேரில் ஆய்வு செய்தார். 
தமிழகம்

கவரைப்பேட்டை ரயில் விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு 

எம். வேல்சங்கர்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தார். விபத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே இந்தரயில் 8.27 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, பிரதான பாதைக்கு பதிலாக கிளை பாதையில் மாறி, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. மேலும் ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதவிர, 3 பயணிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 9 பெட்டிகள் வரை அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பெட்டிகளை அகற்றும் பணிநடைபெறுகிறது. தண்டவாளத்தில் இருந்த பெட்டிகளை அகற்றிய பிறகு, ரயில் தண்டவாளம் சீரமைப்புபணி தொடங்கவுள்ளது.இதற்கிடையில், விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி சனிக்கிழமை பகலில் ஆய்வு செய்தார்.

ரயில்வே தண்டவாளம், சிக்னல் பகுதி, நிலையத்தில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பகுதி, கட்டுப்பாட்டு அறை உள்பட சிக்னல் மற்றும் இயக்கக பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “விசாரணையை தொடங்கி இருக்கிறோம். விசாரணைக்கு பிறகே, விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும்,” என்றார். கவாச் கருவி இருந்திருந்தால், இந்த விபத்து தவிர்த்திருக்க முடியும் தானே என்ற கேள்விக்கு, “கவாச் கருவிக்கும் இந்த விபத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை” என்று அவர் பதிலளித்தார்.

விபத்துக்கு காரணம் என்ன? - இந்த ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, பலத்த அதிர்வு ஏற்பட்டு, 70 கி.மீ. வேகத்தில் கிளை பாதையில்( லூப் லைனில்) சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளனதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே உதவி எண்கள்: விபத்து குறித்து தகவலறிய ரயில்வே உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, பெங்களூரு கேஎஸ்ஆர்: 08861309815, மாண்டியா, கங்கேரி, மைசூரு ரயில் நிலையங்கள்: 0821-2422400, சென்னை கோட்டம்– 04425354151; 044-2435499, பெங்களூரு கோட்டம்: 8861309815, மைசூரு கோட்டம்: 9731143981 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு விபத்து மேலதிக தகவலைப் பெறலாம்.

SCROLL FOR NEXT