சென்னை: தையூர் பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பீலா வெங்கடேசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தமிழக காவல் துறை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த பிரச்சினை காரணமாக ராஜேஷ்தாஸூம், அவரது மனைவி பீலா வெங்கடேசனும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தையூர் பங்களாவில் பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளியை தாக்கிவிட்டு ராஜேஷ் தாஸ் அந்த பங்களாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதாகக் கூறி பீலா வெங்கடேசன் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் கேளம்பாக்கம் போலீஸார் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தையூர் பங்களாவுக்கான மின் இணைப்பைத் துண்டிக்க அரசு உயரதிகாரியான பீலா வெங்கடேசன் அளித்த கடிதத்தின் அடிப்படையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பீலா வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, “தையூர் பங்களாவுக்கான மின் இணைப்பு பீலா வெங்கடேசன் பெயரில் உள்ளது. எனவே, அதற்கான மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. நிலத்தின் ஒரு பகுதி பீலாவின் தந்தையின் பெயரில் இருந்தது. அதை அவர் தனது பெயருக்கு மாற்றி தற்போது குழந்தைகளின் பெயருக்கு மாற்றியுள்ளார்.
ராஜேஷ் தாஸுக்கு சொந்தமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு உள்பட பல இடங்களில் சொத்துகள் உள்ளன. இதனால் அவர் அங்கு சென்று தங்கிக் கொள்ளலாம்” என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.