செந்தில் பாலாஜி | கோப்புப்படம் 
தமிழகம்

மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது இன்று (மார்ச் 28) தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி அவரது தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை வழங்குமாறு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த ஆவணங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவை கிடைத்தபிறகு, அதன் அடிப்படையில் இந்தவழக்கில் வாதிட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்காவிட்டால், எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விடுமுறை என்பதால், சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி. ஆனந்த் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT