மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய நடிகை ராதிகா, ‘‘முதல் முறையாக எம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன், ஆதரவு தாருங்கள்’’ என்று தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை உள்ளடக்கிய விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா, பாஜக சார்பில் போட்டியிடுகிறார். தொகுதியில் இன்று அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக, இன்று காலை பாஜகவினருடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த நடிகை ராதிகா, சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் திருப்பரங்குன்றத்தில் இருந்தே பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்து எங்களது பிரச்சார பயணத்தை தொடங்கி உள்ளோம். எம்பி தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறேன். பாஜக சார்பில் போட்டியிடுவதில் பெரும் மகிழ்ச்சி. வெற்றிபெற்றால் மத்திய அரசிடம் நேரடியாக கேட்டு முறையிட்டு தொகுதிக்கு என்னால் முடிந்த எல்லா விஷயங்களையும் செய்து கொடுக்க முடியும். விருதுநகர் தொகுதியில் செய்யப்பட வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக செய்வோம்.
பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையில் விருதுநகர் மக்களவைத்தொகுதிக்கு செய்ய வேண்டிய கடமைகள், பணிகள் இடம்பெறும். எனது கணவர் சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி மிகவும் பரிச்சயமானது. அங்கு ஏற்கனவே அவர் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ’’ என்றார்.