தமிழகம்

வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன், 30 நாட்களுக்கு முந்தைய வேட்பாளரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம். எனவே, அந்த விவரங்களை கேட்க முடியாது. மேலும், இது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும் எனில், அதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், “நான் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. மருத்துவக் காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக் கூடாது?” என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது. அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள், உடற்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடமையாற்றுவதற்கான உடற்தகுதியைப் பெற்றிருக்கிறார்களா என்பது குறித்த சான்றை பெறலாம்” என யோசனை தெரிவித்தனர்.பின்னர், உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT