Published : 15 Feb 2024 05:36 AM
Last Updated : 15 Feb 2024 05:36 AM

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொருளாதார கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் ஷியாம் திவான், ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடும்போது, நாட்டின் 36 சதவீத தாமிர உற்பத்தியை பூர்த்தி செய்தது. 2014-2018 காலகட்டத்தில் ரூ.13,500 கோடி வரி செலுத்தியுள்ளது. தினமும் 1,200 டன், ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்ய வசதிகள் உள்ளன" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், "சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, நீரி, ஐஐடி, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நிபுணர்கள் மற்றும் பிரபலமான சுற்றச்சூழல் நிபுணர் அடங்கியகுழுவை அமைத்து ஆராயலாம்.அந்தக் குழு, இந்த நிறுவனத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கலாமா என்றும், முந்தைய உத்தரவுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஏனென்றால், இந்த நிறுவனம்தாமிர உற்பத்தியுடன் தொடர்புடையது. நாட்டின் பொருளாதாரத்துடன் பங்களிப்பது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றனர்.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "இது தொடர்பாக தமிழக அரசின் வாதத்தையும் கேட்ட பிறகே, எந்த முடிவுக்கும் வர வேண்டும். பல்வேறு விதிமீறல்களில் இந்த ஆலைநிர்வாகம் ஈடுபட்டது என்பதால்தான், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆலை எந்த உத்தரவையும் மதிப்பதில்லை. அமல்படுத்துவதும் இல்லை" என்றார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலனுடன் சம்பந்தப்பட்டது. இதைபொருளாதாரக் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது. பாதிப்பு ஏற்பட்டதால்தான் மூடப்பட்டது" என காரசாரமாக வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், "இந்த ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம். அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி முடிவு எடுக்கலாம். மேலும், தமிழக அரசின் எதிர்ப்புகளையும், கருத்துகளையும் புறந்தள்ளிவிட முடியாது. அதேநேரம், நாட்டுக்குதாமிரம் தேவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, வேதாந்தா நிறுவனம் தனது தரப்பு வாதத்தையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் சிறு குறிப்பாக தாக்கல் செய்யலாம்" என்று கூறி, விசாரணையை இன்றைக்கு (பிப். 15) தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x