கல்வி - வேலை வழிகாட்டி

உதவித்தொகையோடு முதுகலைப் படிப்பு

ராகா

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்தியக் காட்டுயிர் நிறுவனத்தில் (WII) 2026–2028 கல்வியாண்டுக்கான எம்.எஸ்.சி. நன்னீர் சூழலியல் - பாதுகாப்பு (Freshwater Ecology and Conservation) முதுகலைப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

இந்தப் படிப்பில் நதி, ஏரி போன்ற நீர்வாழ் சூழல்களின் அமைப்பு, செயல்பாடு, அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து விரிவாகக் கற்பிக்கப்படுகிறது. நீர்வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழல் மீது ஆர்வமும் ஆராய்ச்சித் துறையில் பணியாற்ற விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்.

          

கல்வித் தகுதி:

தாவரவியல், விலங்கியல், வனவியல், காட்டுயிர் அறிவியல், கால்நடை அறிவியல், வேளாண்மை, பல்லுயிர்ப் பாதுகாப்பு, உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல் போன்று ஏதேனும் ஒன்றில் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 25 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு நடைமுறை: விண்ணப்பதாரர் இணையவழியில் தகுதித் தேர்வை எழுத வேண்டும். பொது அறிவு, கணிதம், மொழித்திறன், உயிரியல் போன்று முக்கியப் பாடங்கள் தொடர்பான கேள்விகள் இத்தேர்வில் இடம்பெறும்.

தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்தகட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

இறுதியாக 20 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 8, 2026.

மேலும் விவரங்களுக்கு: https://www.wii.gov.in/

SCROLL FOR NEXT