நாங்கள் வசிக்கும் காரைக்குடியில் பெரும்பாலான நாள்கள் வெயிலாகத்தான் இருக்கும். அதனால், கன்னியாகுமரிக்கும் கேரளத்தின் ஆலப்புழைக்கும் செல்லத் திட்டமிட்டுப் புறப்பட்டோம். நாங்கள் போனபோது லேசான மழைத்தூறல் இருந்ததால் சூரிய உதயத்தைப் பார்க்க முடியவில்லை. பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று திரும்புகையில் வானுயர்ந்த குமரி திருவள்ளுவர் சிலையைக் கண்டதும் தமிழராகப் பிறந்ததன் பெருமையைப் பெற்றேன். அந்தப் பெருமையோடு நடந்து சென்றபோது முக்கடல் சங்கமம் வந்துவிட்டது. மூன்று கடல்களின் தண்ணீரும் வேறு வேறு நிறத்தில் இருக்கும் அறிவியலின் அதிசயம் நம்மை வியக்க வைக்கும்.
விவேகானந்தர் பாறைக்குப் படகில் சென்றோம். நாங்கள் சென்றபோது கண்ணாடிப் பாலம் அமைத்திருக்கவில்லை. அதற்காகவே மீண்டும் செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். பாறையின் மீது அடிக்கும் அலையின் துளிகள் நம் மேல் விழுந்தபோது எழுந்த பரவசத்தோடு மாலையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு, சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குச் சென்று அந்த நாளை முடித்தோம்.
மறுநாள் திற்பரப்பு அருவிக்குச் சென்றோம். வெள்ளம் இல்லாததால் தண்ணீரின் வருகை நிதானமாக இருந்தது. குளித்துவிட்டுக் கிளம்பினோம். சுற்றியும் ரப்பர் மரங்களுக்குள் வாகனம் செல்வது கண்களுக்கு இன்பமாக இருந்தது. அடுத்து நம் முன்னாள் முதல்வர் காமராஜர் கட்டிய மாத்தூர் தொட்டிப் பாலத்துக்குச் சென்றோம். தொட்டிப் பாலத்தின் நடுவே நின்று இருபுறமும் பார்த்தால் உயிர் நடுக்கம் வந்துவிடும். தமிழகத்தைக் கடந்து கேரளத்துக்குள் வண்டி நுழைய, அந்த மாநிலம் எங்களை மழையோடு வரவேற்றது.
காலையில் ஆலப்புழை வந்துவிட்டோம். நாங்கள் 15 பேர் இருந்ததால் எங்களுக்கு எனத் தனிப்படகையே வாடகைக்கு எடுத்துவிட்டோம். எங்கள் படகில் கழிப்பறையுடன் இரண்டு அறைகள், சமையலறை, சிறிய வரவேற்பு அறையுடன் கூடிய உணவறையும் இருந்தன. வரவேற்புப் பானம் கொடுத்து வரவேற்றனர். மனதுக்குப் பிடித்த பாடலைக் கேட்டபடி படகுப் பயணம் மெதுவாகத் தொடங்கியது.
நான்கு பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டு நிறைய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவர்கள் எப்படி வெளியே செல்வார்கள் என யோசித்தபோதே, சிறிய படகில் வயதான அம்மா ஒருவர் சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சிறிய படகு அல்லது தோணி கட்டப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் படகில்தான் செல்வார்களாம். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள்வரை எல்லாருக்கும் படகு செலுத்தத் தெரிந்திருந்தது.
சிறிது நேரத்தில் சிறிய தீவு போன்ற பகுதியில் மதிய உணவுக்கு நிறுத்தினார்கள். கேரளத்தின் அரிசிச் சோறு, மீன் குழம்பு, மீன் வறுவல் என அருமையாக இருந்தது. மீண்டும் பயணம் தொடங்கியது. மாலை நெருங்கியவுடன் சுடச் சுட தேநீரும் வெங்காய பஜ்ஜியும் கொடுத்தார்கள். அழகிய பசுமையான நினைவுகளுடன் மாலை 5 மணிக்குப் பயணத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே ஊருக்குப் புறப்பட்டோம்.
- இரா. முத்துலெட்சுமி பாஸ்கரன், காரைக்குடி.