அஞ்சலகத்தில் பதிவுத் தபால் அனுப்பும் முறை தற்போது நடைமுறையில் இருக்கிறதா, டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
இல்லை இனியா. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த பதிவுத் தபால் எனும் சேவையை 2025, செப்டம்பர் 1 முதல் நிறுத்திவிட்டது இந்திய அஞ்சல் துறை.
அதற்குப் பதிலாக விரைவுத் தபால் எனும் சேவையை ஆரம்பித்துள்ளது. இது பதிவுத் தபாலைவிட வேகமாகவும் துல்லியமாகவும் சென்றடையும். இதற்குப் பதிவுத் தபாலைவிடக் கட்டணமும் அதிகம்.
எல்பிஜி, பிஎன்ஜி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் டிங்கு? - ஜெ. முத்துச்செல்வம், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
சமையலுக்கும் எரிசக்திக்கும் எல்பிஜி, பிஎன்ஜி வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்பிஜி என்பது சிலிண்டரில் கிடைக்கிறது. பிஎன்ஜி குழாய் மூலம் சமையலறைக்கே வருகிறது.
புரோபேன், பியூட்டேன் ஆகிய வாயுக்கள் அதிக அழுத்தத்தில் திரவமாக்கப்பட்டு, சிலிண்டருக்குள் அடைக்கப்படுகின்றன. இந்த வாயுக் கசிவைக் கண்டறிவதற்காக மெர்காப்டன் எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.
இதன் மூலம் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் நம்மால் உடனே கண்டறிய முடியும். விபத்தைத் தடுக்க முடியும். பிஎன்ஜி குழாய்களில் வரும் மீத்தேன் வாயுவாகவே வருகிறது.விபத்து ஏற்படும் அபாயம் குறைவு.
இதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மின்சாரத்தைப் போல பயன்படுத்திய பிறகு பணம் செலுத்தலாம், முத்துச் செல்வம்.