1980களில் உலகம் முழுவதும் ஓர் அச்சம் பரவியது. வானில் ஒரு பெரிய ஓட்டை உருவாவதாகவும் அதன் மூலம் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படப் போவதாகவும் அறிவியலாளர்கள் எச்சரித்தனர். அதுதான் ஓசோன் படலத்தின் சிதைவு. இந்த ஓசோனைச் சுற்றி நிகழ்ந்த கதை அறிவியலை மட்டுமல்ல; உலக அரசியலையும் மாற்றியது.
1840இல் கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் ஷான்பீன் மின்னலின்போதும் மின்வெளியேற்றங்களின்போதும் விநோத வாயு ஒன்று உருவாவதைக் கண்டறிந்தார். அதன் வித்தியாசமான நாற்றத்தின் காரணமாக, கிரேக்கத்தில் நாற்றம் எனும் பொருள்படும் ’ஓசோன்’ எனப் பெயரிட்டார். ஓசோன் என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்த வாயு என்பதைப் பின்னர் அறிவியலாளர்கள் உறுதிசெய்தனர்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்பெக்ட்ரோஸ்கோபி கருவியின் உதவியுடன் வாயுக்களின் ஒளியை உறிஞ்சும் தன்மையை வைத்து, அதனை அடையாளமிடும் ஆய்வுகளில் அறிவியலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
1881இல் வால்டர் ஹார்ட்லி, ஓசோன் வாயு புறஊதாக் கதிர்களை அதிக அளவில் உறிஞ்சுவதாகக் கூறினார். இதன் மூலம் சூரியனில் இருந்து வெளியாகும் ஆபத்தான கதிர்களில் இருந்து பூமியை ஓசோன் பாதுகாக்கிறது என்று தெரியவந்தது.
1920இல் கார்டன் டாப்ஸன் என்பவர் டாப்ஸன் ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டர் என்கிற கருவியை உருவாக்கினார். இந்தக் கருவி வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களைத் துல்லியமாக அளவிட உதவியது. இதன்மூலம் செய்த சோதனைகளின் அடிப்படையில் ஓசோன் என்பது பூமியின் பரப்பில் இருந்து சுமார் 15-35 கி.மீ. உயரத்தில் அடுக்கு வளிமண்டலத்தில் (Stratosphere) இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
1930இல் சிட்னி சேப்மேன், புறஊதாக் கதிர்கள் தொடர்ச்சியாக ஓசோன் மூலக்கூறுகளை உடைத்து ஆக்சிஜன் அணுக்களாக மாற்றுவதையும், அந்த அணுக்கள் மீண்டும் ஒன்றிணைந்து ஓசோனாக மாறுவதையும் முன்மொழிந்தார்.
இது சுழற்சியாக நடைபெறுவதாகக் கூறினார். இதுவே சேப்மேன் சுழற்சி என அறியப்படுகிறது. இந்தக் கண்டறிதல் வளிமண்டல வேதியியல் எனும் தனிப்பிரிவு உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
இவ்வாறு ஓசோன் படலத்தின் இயக்கத்தைக் கண்டறிந்த அறிவியலாளர்களுக்கு அடுத்த பெரிய சவால் எழுந்தது. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து, முன்பு இல்லாத அளவு தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்தது.
புதிய புதிய வேதிப் பொருள் கண்டறிதல்கள் நிகழ்ந்தன. இதில் ஒன்றாக வேதி நிறுவனங்கள் கார்பன், ஃபுளோரின், குளோரின் ஆகிய அணுக்கள் இணைந்த குளோரோ ஃபுளூரோ கார்பன் (சிஎஃப்சி) எனும் சேர்மத்தைக் கண்டறிந்தன.
இந்த சிஎஃப்சி அதிசய வேதிப்பொருள் என அழைக்கப்பட்டது. காரணம், இந்த வேதிப்பொருளுக்கு நச்சுத்தன்மை கிடையாது. எளிதில் தீப்பிடிக்காது. வேதியியல்ரீதியில் நிலையானது.
குளிர்சாதனப் பெட்டிகளிலும் மருந்து தெளிப்புக்குப் பயன்படும் ஏரோசால் தெளிப்பான்களிலும் பயன்பட்டது. செயற்கைப் பஞ்சு உற்பத்திக்கும் மூலமாக இருந்தது.
இவ்வளவு சிறப்பம்சம் நிறைந்த வேதிப்பொருளை நிறுவனங்கள் விடுமா? போட்டிப்போட்டுக் கொண்டு தயாரித்தன. லாபம் பார்த்தன. ஆனால், ஒரே ஒரு பிரச்சினை இருந்தது. இந்த வேதிப்பொருள் சுற்றுப்புறத்தில் வெளியேறியபோது ஓசோன் மண்டலத்தைச் சேதப்படுத்தத் தொடங்கியது.
இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக உலகம் முழுவதும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் உருவாகி, அறிவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றின. இவை உலகம் முழுவதும் ஏற்படும் மாசுபாட்டின் அளவை ஆராய்ந்து வந்தன.
1974இல் மரியோ மோலினா, எஃப். ஷெர்ரி ரோலாண்ட் ஆகிய அறிவியலாளர்கள் வளிமண்டலத்தை ஆய்வு செய்தபோது, சுற்றுப்புறத்தில் வெளியேற்றப் படும் சிஎஃப்சி அடுக்கு வளிமண்டலத்தில் சென்று ஓசோன் மண்டலத்தைப் பாதிப்பதைக் கண்டுகொண்டனர்.
சிஎஃப்சி அடுக்கு வளிமண்டலத்துக்குச் சென்றவுடன் அங்கே இருக்கும் புறஊதாக் கதிர்களுடன் வேதிவினைக்கு உள்படுகிறது. அப்போது சிஎஃப்சியில் உள்ள குளோரின் அணு ஓசோனில் உள்ள ஆக்சிஜன் அணுக்களுடன் வினைபுரிந்து குளோரின் மோனாக்ஸைடாகவும் ஆக்சிஜனாகவும் மாறுகிறது.
பிறகு இந்த குளோரின் மோனாக்ஸைடு தனி ஆக்சிஜன் அணுவுடன் வினைபுரிந்து மீண்டும் குளோரினை வெளியேற்றுகிறது. இந்த குளோரின் மறுபடியும் ஓசோனைப் பாதிக்கிறது. இவ்வாறு குளோரின் வினையூக்கியாகச் செயல்பட்டு ஓசோனைத் தொடர்ந்து சேதப்படுத்துகிறது என்பது தெரிந்தது.
இந்தக் கண்டறிதல் உலகம் முழுவதும் எச்சரிக்கை மணியை ஒலித்தது. ஆனால், சிஎஃப்சியை உருவாக்கும் நிறுவனங்கள் வேறுவிதமாகக் கவலைகொண்டன. திடீரென்று சிஎஃப்சியை நிறுத்தச் சொன்னால் அது உற்பத்தியைப் பாதித்து லாபத்தை நிறுத்திவிடும் இல்லையா? இதனால் அவர்கள் மாற்றுக் கருத்துகளைப் பரப்பத் தொடங்கினர்.
இயற்கையாக எரிமலை, கடல்நீரில் இருந்து வெளியாகும் குளோரின் அளவு சிஎஃப்சியில் இருந்து வருவதைவிடக் கூடுதல் என்றும், சிஎஃப்சியை நிறுத்தினால் குளிர்சாதனப் பெட்டி பற்றாக்குறை ஏற்பட்டு, உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றும் பயமுறுத்தினர். அதாவது மக்கள் பாதுகாப்பைவிட சிஎஃப்சியே முக்கியம் என்றனர்.
குளிர்சாதனம், மருத்துவம், மின்னணு, உற்பத்தி ஆகியவை சிஎஃப்சியைச் சார்ந்து இருந்ததால் அரசாங்கங்களும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டின.
ஆனால், அறிவியலாளர்களின் அடுத்தடுத்த ஆய்வுகளும் செயற்கைக்கோள் தரவுகளும் அண்டார்க்டிகாவில் ஓசோன் படலம் மெலிந்து வருவதையும், இது தொடர்ந்தால் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் நிறுவின.
இதன் விளைவாக 1970-80களில் உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிய பின்னர், சிஎஃப்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிய அரசுகள் வழிக்கு வந்தன. இதையடுத்து சர்வதேச நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து 1987இல் மான்ட்ரியல் ஒப்பந்தத்தைத் தயார் செய்தன.
இந்த ஒப்பந்தத்தின்படி சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் தொழிற்சாலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாக ஓசோன் படலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதும், பயன்படுத்தப்படுவதும் தடை செய்யப்பட்டன. சர்வதேச அளவில் பொருளாதாரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சிஎஃப்சிக்கு மாற்றுத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு ஓசோன் படலம் காப்பாற்றப்பட்டது.
இந்தியா போன்ற வளரும் நாடுகள் மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு மாறத் தேவையான நிதி உதவி அளிக்கச் சர்வதேச நிதியம் அமைக்கப்பட்டது.
சில நாடுகளில் சிஎஃப்சி தொழில்நுட்பத்தில் செயல்படும் குளிர்சாதனப் பெட்டியைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மக்களுக்குச் செலவின்றி புதிய மாற்றுத் தொழில்நுட்பக் குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
மாண்ட்ரியல் ஒப்பந்தத்துக்குப் பிறகு வெறும் 15 ஆண்டுகளில் சிஎஃப்சியின் உற்பத்தி, நுகர்வு முற்றிலும் முடிவுக்கு வந்தது. மாண்ட்ரியல் ஒப்பந்தம் கறாராகக் கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் 2050க்குள் உலகம் முழுவதும் ஓசோன் படலம் அபாயகரமாக மெலிந்து பூமி உயிர் வாழத் தகுதியற்ற இடமாக மாறி இருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
இவ்வாறு ஓசோன் படலத்தின் கதை ஓர் அறிவியல் கண்டறிதலின் வரலாறு மட்டுமல்ல; அறிவியல், அரசியல், தொழில், மக்கள் இயக்கம் ஆகிய நான்கும் ஒன்றிணைந்தால் உலக அளவிலான சுற்றுச்சூழல் நெருக்கடியைக்கூடச் சமாளிக்க முடியும் என்பதை நிரூபித்த முதல் பெரிய வெற்றிக் கதை.
இதுவே காலநிலை மாற்றம் போன்ற இன்றைய உலக அளவிலான சவால்களுக்கும் முன்னுதாரணமாக அமைகிறது.
ஓசோன் மூலம் வளிமண்டல வேதியியல் குறித்துப் புது வெளிச்சம் பாய்ச்சியதற்காக பவுல் க்ருட்சன், மரியோ மோலினா, ஷெர்ரி ரோலாண்ட் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
(திருப்புமுனையைக் காண்போம்)
tnmaran25@gmail.com