பரதநாட்டியத்தில் பல்வேறு பாணிகள் இருப்பினும் பந்தநல்லூர் பாணி நடனம் மிகவும் பிரபலமானது. இந்த பந்தநல்லூர் பாணியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி பெற்ற அனுபவத்தோடு பரதநாட்டியத்தில் அசத்தி வருகிறார் இளம் கலைஞர் ஸ்ருதி உமையாள்.
இளங்கலை கணக்கியல் படிப்புக்குப் பிறகு, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் வழிகாட்டுதலில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் ஸ்ருதி. சென்னையிலுள்ள ‘கலாதிக்ஷா’ நடனப்பள்ளியில் பத்மஸ்ரீ விருது பெற்ற மீனாக்ஷி சித்தரஞ்சனிடம் பந்தநல்லூர் பாணி பரதத்தைக் கற்றார்.
2012ஆம் ஆண்டில் பரதநாட்டிய அரங்கேற்றத்தைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது ‘கலாதிக்ஷா’வில் ஆசிரியராகப் பணியாற்றும் ஸ்ருதி வெளிநாட்டு மாணவர்களுக்குப் பரதநாட்டியத்தைக் கற்பித்து வருகிறார்.
சென்னையில் நடைபெறும் பிரபல இசை நாட்டிய விழாக்கள், நாட்டியாஞ்சலி நிகழ்வு, கோயில் திருவிழாக்கள், வெளிநாடுகளிலுள்ள முக்கிய அரங்குகள் என்று பல இடங்களில் நடனமாடி முத்திரையைப் பதித்துள்ளார் ஸ்ருதி.
2013ஆம் ஆண்டு முதல் சென்னையின் முக்கிய அரங்குகளான ராஜா அண்ணாமலை மன்றத்தின் தமிழ் இசைச் சங்கம், நாரத கான சபா, தியாக பிரம்ம கான சபாக்களில் தனி நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பரதநாட்டியப் பள்ளியைத் தொடங்கி நிர்வகிக்க வேண்டுமென்பது இவரின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்று. பாரம்பரியமான பரதக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார் ஸ்ருதி.