இந்தக் குரல் உங்கள் அடிவயிற்றில் அணுகுண்டை வெடிக்கச் செய்யலாம். ஆனாலும், ஒருமுறையேனும் இந்தக் குரலைக் கேட்கத் தவறிவிடாதீர்கள். பீரங்கிகளிலிருந்து புறப்பட்டு வரும் குண்டுகள் கட்டிடங்களை உடைத்துச் சிதறச்செய்வதுபோல, இந்தக் குரல் உங்கள் இதயத்தைச் சுக்குநூறாக உடைத்து சிதறச் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் ஒருமுறையேனும் இந்தக் குரலைக் கேட்டுவிடுங்கள்.
மதம், இனம், மொழி என ஏதாவது ஒரு காரணத்தைப் பற்றிக்கொண்டு நீங்கள் யுத்தத்தை ஆதரிப்பவராக இருந்தால், இந்தக் குரல் உங்களை மனிதனாக மாற்றி யுத்தத்திற்கு எதிராகப் பேசவைக்கும். இல்லை, ஏற்கெனவே நீங்கள் மனிதராக இருந்து யுத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பவராக இருந்தால் இந்தக் குரல் இன்னும் அதிகமாக யுத்த எதிர்ப்பை நோக்கி உங்களை உந்தித் தள்ளும்.
சுற்றிலும் என்ன நடக்கிறது என்கிற அக்கறை இல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பர்களே, குறிப்பாக உங்களுக்குத்தான் இந்தக் குரலைப் பரிந்துரை செய்கிறேன். நிம்மதியான உங்கள் வாழ்க்கையை நிலைகுலையச் செய்யப்போகும், இந்தக் குரலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையென்று இருந்துவிட முடியாது.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியின் பெயர் ஹிந்த் ராஜப். அதிகமில்லை ஆறுவயதுதான் அவளுக்கு. வியட்நாம் சிறுமியைப் போல, யுத்தத்தின் கோரமுகத்தை இந்த உலகத்தின் கண்களுக்குக் காட்டிய எத்தனையோ காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், யுத்தக்களத்திலிருந்து பீரங்கிகளுக்கு நடுவிலிருந்து, உயிரற்ற சடலங்களுக்கு நடுவில் இருந்து உதவிகேட்டு ஒலித்த ஹிந்த் ராஜப் என்கிற குழந்தையின் குரல் யுத்தத்திற்கு எதிராக என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.
எதிர்காலத்தில் இன்னும் நவீனமான ஆயுதங்கள் கொண்டு, இன்னும் நவீனமாக மனிதர்களைக் கொன்று குவிக்கலாம் யுத்தவெறியர்கள். ஆனாலும், ஒர் ஆறுவயதுச் சிறுமியின் முன்னால், யுத்த வெறியர்கள் தங்கள் கோரமுகத்தைக் காட்டியிருக்கக் கூடாதுதான். உணவில்லாமல், தண்ணீரில்லாமல் ரத்தம் சொட்டச்சொட்ட ஓர் ஆறுவயதுச் சிறுமியைத் தவிக்க விட்டிருக்கக் கூடாதுதான். ‘அவர்கள் இருளின் குழந்தைகள், கொல்லப்பட வேண்டியவர்கள்’ என்று யுத்தத்தை ஆரம்பித்தவர்களின் அழுக்கான இதயத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் இன்னும் நெருப்பாகச் சுட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
சென்ற வருடம் 82ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படம் முடிந்து உணர்ச்சிவசப்பட்ட மனிதர்கள், கலங்கிய இதயத்தோடும், கலங்கிய கண்களோடும் இருபது நிமிடங்களுக்கும் மேலாக எழுந்து நின்று கைதட்டி இருக்கிறார்கள். வெனிஸ் திரைப்பட விழாவின் வரலாற்றில் நீண்டநேரம் கைதட்டல் பெற்ற திரைப்படம் இதுதான். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரான பிராட் பிட்டும் இந்தத் திரைப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்!
உயிர்போகும் நிலைமையில் உதவிகேட்டு ஒலிக்கும் ஓர் அபயக்குரலைக் காட்சிப்படுத்த முடியுமா? காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் கெளதர் பென் ஹனியா. தன்னுடைய இதயத்தைக் குத்திக்கிழித்த ஒரு குரலை, எல்லாரையும்போலக் கேட்டுவிட்டுக் கடந்து செல்லாமல், சினிமாவாக மாற்றி, உலகத்தின் கண்களுக்கு முன்னால் அந்தக் கொடூரத்தை உரக்கச் சொன்ன இயக்குநரின் கரம்பற்றிக்கொள்கிறேன்.
இந்தக் கதையை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம். ஏன் ஹிந்த் ராஜபின் குரலை நீங்கள் ஏற்கெனவே கேட்டிருக்கலாம். உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான வேலையில் அதை மறந்துமிருக்கலாம். ஆனால் சினிமாவின் வேலை நீங்கள் கவனிக்க மறந்ததைக் கவனிக்கச் செய்வதுதான். நீங்கள் கடந்துபோனதை நினைவுபடுத்துவதுதான். பார்க்க மாட்டேன் என்று நீங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும், உண்மையை உங்கள் முகத்துக்கு எதிராக பெரிதாகக் காட்டுவதுதான் சினிமா.
2024, ஜனவரி 29 ஏவுகணைகளாலும் ட்ரோன் தாக்குதல்களாலும், பீரங்கிகளாலும் ராணுவத்தினரின் துப்பாக்கிகளாலும் காஸா சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம். இஸ்ரேல் ராணுவம் காஸாவின் டெல் அல் ஹவா பகுதியில் இருக்கும் மக்களை வெளியேறச் சொல்கிறது. காஸாவில் இருந்து 52 மைல் தொலைவிலிருக்கும் மேற்குக் கரையின் ரமல்லாவில், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய ரெட் கிரசண்ட் அவசர அழைப்பு மையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
டெல் அல் ஹவா பகுதியில் இருந்து காரில் வெளியேறிக் கொண்டிருந்த ஒரு குடும்பம் தாக்கப்பட்டிருக்கிறது, உதவி செய்யுங்கள் என்று ஜெர்மனியில் இருந்து ஓர் அழைப்பு வருகிறது. சிறிதுநேரத்தில் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என்கிற செய்தி வருகிறது.
ஈர இதயங்கொண்ட ஓமர் அந்த எண்ணிற்கு அழைக்கிறான். லயான் என்கிற சிறுமி அழைப்பை எடுத்து, “எங்களைச் சுடுகிறார்கள், டேங்க் பக்கத்தில் இருக்கிறது” என்று சொல்கிறாள். ஓமர் அடுத்த கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. இணைப்பு துண்டிக்கப்பட்டதும் ஒமர் பதட்டமாகிறான். மீண்டும் அழைத்துப் பார்க்க, இணைப்பு கிடைக்காமல் இருக்கிறது. சிறிதுநேரம் கழித்து காரில் இருப்பவர்களின் உறவினர் ஜெர்மனியிலிருந்து மீண்டும் செய்தி அனுப்புகிறார்.
“ஆறு வயதுக் குழந்தை உயிருடன் இருக்கிறாள், அழைக்கவும்” என்று. அதிகமான பதட்டத்தோடு அந்த எண்ணிற்கு மீண்டும் அழைக்கிறான் ஒமர். “ஹலோ மாமா, என்னுடன் இருங்கள் என்று உரையாடத் தொடங்குகிறாள் அந்தக் குழந்தை. ஹனூத் என்று அரபியில் செல்லமாக அழைக்கப்படும் அந்தக் குழந்தை தன்னுடைய பெயரைச் சொல்கிறாள். ஹிந்த் ராஜப் ஹமாடா.
“அவர்கள் சுடுகிறார்கள், ,வா என்னைக் காப்பாற்று” என்று அழைக்கிறாள் அந்தக் குழந்தை. உதவி மையத்தில் ஒமரோடு வேலை செய்யும் ராணா குழந்தையிடம் பேசுகிறாள். என்ன கேள்வி கேட்டாலும் “வா, என்னைக் காப்பாற்று” என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாள் குழந்தை. அம்மா எங்கே என்று கேட்கும் ராணாவிடம், அம்மாவும் தம்பியும் வீட்டில் இருக்கிறார்கள் என்கிறாள். அடுத்த கேள்விக்கான பதிலில் பேசிக்கொண்டிருக்கும் ராணாவை மட்டுமல்ல, பார்த்துக் கொண்டிருக்கும் நம்மையும் பதட்டத்திலும் துயரத்திலும் உறையச் செய்துவிடுகிறாள் ஹிந்த்.
“சாரா பக்கத்தில்தான் இருக்கிறாள், ரத்தம் இருக்கிறது. அவள் தூங்குகிறாள். மாமா, மாமி, சகோதர சகோதரிகள் எல்லாரும் காரில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தக் குழந்தை சொல்லச் சொல்ல, கொல்லப்பட்ட ஆறு சடலங்களுக்கு மத்தியில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறாள் ஹிந்த் என்பதை அறிந்து துடித்து துடிதுடித்துப் போகிறாள் ராணா.
இன்னொரு முனையில் கேட்டுக் கொண்டிருந்த ஒமர் கடுங்கோபத்தில் மேலதிகாரியிடம் சண்டை போடுகிறான். “உடனே நம் ஆள்களை அனுப்பி அந்தக் குழந்தையைக் காப்பாற்றச் சொல்லுங்கள்” என்று கத்துகிறான். செஞ்சிலுவைச் சங்கத்திடம் பேச வேண்டும், இதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் அமைச்சகத்திடம் பேச வேண்டும் என்று நேரம் கடந்துகொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் ராணா குழந்தையிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாள். தண்ணீரும் சாப்பாடும் இல்லை என்கிறாள் ஹிந்த். அவளை ஆற்றுப்படுத்த குர் ஆன் ஓதலாமா என்று கேட்கிறாள் ராணா. இருவரும் கணநேரம் அல்லாவிடம் மன்றாடிக்கொள்கிறார்கள்.
வெறும் எட்டு நிமிடங்கள் தேவைப்படும் மீட்புப் பணிக்கு இரண்டு மணிநேரம் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. யுத்தத்திற்கு நடுவில் மீட்புப் பணிக்கான ஒருங்கிணைப்பு செய்வது சவாலாக இருக்கிறது. “சுடுகிறார்கள். காப்பாற்று ராணா. உன் கணவரிடம் சொல், சீக்கிரம் இங்கே வா” என்று கெஞ்சாத குறையாக அழைக்கிறாள் ஹிந்த். அவளுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்க, மீட்பு வாகனம் அருகில் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் ஹிந்த் மீட்கப்பட்டுவிடுவாள் என்கிற எதிர்பார்ப்பில் எல்லாரும் இருக்கும்போது, பயங்கரமான வெடிச்சத்தம் கேட்கிறது. மீட்பு வாகனத்தின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மீட்கப் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். அப்படியென்றால் ஹிந்த்?
12 நாள்கள் கழித்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய பின்பு சென்று பார்க்கிறார்கள். ஹிந்த் உள்பட ஹமாதா குடும்பம் மொத்தமும் பலியாகியிருக்கிறார்கள். காரில் துளைக்கப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை 355. அந்தக் குழந்தைக்கு கடல் என்றால் அவ்வளவு விருப்பமாம், போர் முடிந்த பிறகு காஸாவின் கடற்கரைக்குச் சென்று விளையாடலாம் என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டேயிருப்பாளாம். கடல் அங்குதான் இருக்கிறது! ஆனால்?
“இந்தச் செய்தி ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்ததுதான். ஆம், மக்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். ஆனால் உணர்வதில்லை. அவர்களை உணரச் செய்யவே இந்தப் படத்தை எடுத்தேன்” என்கிறார் இயக்குநர். உணரச் செய்வதுதான் கலை. உணரச் செய்வதுதான் சினிமா. உணருங்கள். ஹிந்த் ராஜபின் குரல் எல்லாருக்கும் கேட்கட்டும்.
கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com