இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: சட்டென்று மாறுது வானிலை - ஜெய்யின் காப்பியும் மீனாட்சியின் ஒரிஜினலும்!

திரை பாரதி

திரைப் பாடலின் அழகிய வரியைத் தலைப்பாக்கி, பரிச்சயமான நட்சத்திரங்களுடன், படம் முழுவதும் ‘ரிச் லுக்’குடன் பிரேம்களை உருவாக்க வேண்டும் என்கிற தீர்மானத்துடன் ரிச்சர்ட் எம்.நாதனின் ஆடம்பரமான ஒளிப்பதிவு, அதற்கு அட்டகாசமான தயாரிப்பு வடிவமைப்பு, கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் வசீகரமான இசை எனக் களமிறங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாபு விஜய்.

ஆனால், காதல், தற்காலத்தின் டார்க்வெப் மாபியாவுக்கு தீனி போட்டு பணம் பண்ணும் தீயவர்கள், அரசியலில் பதவி ஆசை, சொத்துக்காக எதையும் செய்யத் துணியும் மனிதர்கள் எனப் பலவற்றை ஒரு களத்துக்குள் கொண்டு வந்து திரைக்கதையாகக் கோர்த்ததில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறாரா என்று பார்ப்போம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ராமச்சந்திரன் (ஜெய்), 300 கோடி சொத்துக்கு அதிபதியான அமைச்சரின் மகள் என்று தெரியாமலேயே ஜானகியை (மீனாட்சி கோவிந்தராஜன்) பப் ஒன்றில் பார்த்ததுமே காதலிக்கத் தொடங்கி ‘சட்டென்று’ கல்யாணமும் செய்துகொண்டு ஹனிமூன் கிளம்பிவிடுகிறார். இவர்கள் தேன்நிலவுக்குப் போய் தங்கும் ரிசார்ட் அதிபர் ராஜுவுக்கு (கருடா ராம்) நட்சத்திர ஹோட்டல். அவருக்கு ஹோட்டல்கள், ரிசார்ட்கள் என்று ஏகப்பட்ட டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் சொத்துகள். இருப்பது போதாதென்று தன்னுடைய ரிசார்ட்களுக்கு இளம் ஜோடிகளை அதிரடி ‘வாடகை டிஸ்கவுண்ட்’ என்று கவர்ந்து இழுத்து, அவர்களின் படுக்கையறைக் காட்சிகளை டார்க் வெப் இணையதளங்களுக்கு விற்று மில்லியன் டாலர்களில் வருமானம் ஈட்டுகிறான். இது நம் நாயகனுக்குத் தெரிந்துவிட, இதிலிருந்து தன்னையும் தன்னை நம்பி வந்த பெண்ணையும் அவர் எப்படிக் காப்பாற்றினார் என்பது கதை.

முதல் பாதியில் ரிசார்ட் ராமு தவிர, இன்னும் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள். ஒருவர், ஜானகியின் ஆண் நண்பனாக இருந்தாலும் அவளது அப்பா சேர்த்து வைத்துள்ள சொத்துகளை, ஆட்டை போட, ஜானகியை எப்படியாவது தன் வழிக்குக் கொண்டுவருவது என்று முயலுகிறான். இன்னொரு வில்லன் ஜானகியின் அமைச்சர் அப்பா. அவர், தன்னுடைய அரசியல் பதவி சுகத்துக்காக மூத்த அமைச்சருக்குத் தன் மகளை இரண்டாம் மணம் செய்துகொடுக்க முயல்கிறார். இந்தச் சிக்கல் போதாது என்று புதுமணத் தம்பதிகளான நமது நாயகன் - நாயகி இடையே கருத்து வேறுபாடு வேறு ஊடாக வந்து பாடாகப் படுத்துகிறது.

கருடா ராம் செய்யும் தொழிலே கர்ணக் கொடூரமாக இருக்கும்போது பிறகு எதற்கு இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் வில்லன்கள் என்கிற கேள்வி எழுகிறது. அப்பாவை வெறுத்து வெளியே வந்து, நாயகனைத் திருமணம் செய்துகொள்ளத்தான் இந்த எக்ஸ்ட்ரா என்றால் இயக்குநருக்குத் திரைக்கதையோ, கதாபாத்திரமோ சரிவர எழுத வரவில்லை என்று பொருள். இதுபோல் திரைக்கதை சிக்கல், இரண்டாம் பாதியிலும் இருந்தாலும் தர்க்கங்களும் ஆங்காங்கே பல்லிளித்தாலும், கிளைமாக்ஸில் நாயகன் செய்யும் ஐடியா ரசிக்கும்படியாக நச்சென்று இருக்கிறது. ஆனால், அதை டீடெயில் செய்திருந்தால் ரசிகர்களுக்கும் இன்னும் பிடிக்கும்.

வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என்று கலவை சோறு போல மூன்று விதமான கேரக்டர்களை பிசைந்துகொண்டு வரும் யோகி பாபு தயவு செய்து நாம் என்ன மாதிரியான கதாபாத்திரங்களை நடிக்கிறோம், சம்பளம் கொடுத்தால் கேரக்டர் கேட்காமலேயே நடிக்கப் போகலாமா என்பதையெல்லாம் கொஞ்சம் யோசிப்பது நல்லது. இல்லையென்றால் போகி பாபு ஆகிவிட வேண்டியிருக்கும்.

படத்தின் முதல் பலம் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் என்றால், இரண்டாவது பலம் இசையமைப்பாளர். மூன்றாவது இடத்துக்குத்தான் நடிகர் ஜெய் வந்து சேர்கிறார். ஜெய் பார்க்க அழகாகவும் ஒரு காதல் நாயகனுக்குரிய வசீகரத்தை அப்படியே சேதாரம் இல்லாமல் தக்க வைத்திருந்தாலும் அவர் இந்தப் படத்தில் ஆடியிருப்பது சரியான அழுகுணி ஆட்டம்! ஆமாம்!

விஜய் ஸ்டைலை அட்டைக் காப்பியடித்து நடித்திருக்கிறார். அதை ஒரு கட்டம் வரைதான் ரசிக்க முடிகிறது. தவிர அவருக்கென்று அமைந்துவிட்ட ஓர் இயல்பான உடல்மொழியைக் கைவிட்டது அவருக்கு இது சுத்தமாக செட்டாகவில்லை என்பது உறுதி. அவர் இதுபோன்ற விஷயப்பரிச்சையை இந்த ஒரு படத்துடன் நிறுத்திவிடுவார் என்று நம்புவோம்.

ஜானகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் ஜெய்யைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். கிளாமர் தொடங்கி. வளரும் நடிகைகள் நடிக்கத் தயங்கும் காட்சிகளில் எல்லாம் துணிந்து நடித்திருக்கிறார். ஜெய் ஆடியது காப்பி என்றால் மீனாட்சி ஆடியது ஒரிஜினல் ஆட்டம்!

நல்ல கதைக்களம் கிடைத்தும் அதில் எக்ஸ்ட்ரா லக்கேஜ்களை ஏற்றியதால் தடுமாறுகிறது இந்த ‘சட்டென்று மாறுது வானிலை’. மற்றபடி சுவாரசியமான காதல் காட்சிகள், அசத்தலான இசை, ஒளிப்பதிவு, கிளைமாக்ஸ் ஐடியாக ஆகியவற்றுக்காக ஒருமுறைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT