நவீனத் தன்மையும் சுய ஆளுமையும் தார்மிக வெடிப்பும் கொண்ட பல பெண் கதாபாத்திரங்களைப் புத்தாயிரத்துக்குப் பிறகான தமிழ்த் திரை வெளி கண்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த 2022-இல் வெளியான பா.ரஞ்சித்தின் ‘ஒரு நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் வரும் ‘ரெனே’ கதாபாத்திரத்தை மீறிச் செல்லும் ‘விஜி’ என்கிற பெண் கதாபாத்திரத்தைத் தமிழ்ப் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது ‘29’ திரைப்படம்.
‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஆர்.எம்.ரத்னகுமார் எழுதி, இயக்கியிருக்கும் இப்படம், அவருடைய முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் ஒரு புதிய திரைமொழியைக் கண்டடைந்திருக்கிறது.
29 வயது என்பது ஓர் ஆணின் வாழ்கையில் சமூக மற்றும் பொருளாதார அழுத்தம் உச்சமடையும் காலம். அந்த வயதையே தலைப்பாகக் கொண்டு, ஒரு தனி மனிதனின் காதல் தோல்வி, எப்படி ஒரு சமூக மாற்றத்துக்கு வித்திடுகிறது என்பதை இயக்குநர் ரத்னகுமார் சித்தரித்த விதம், காதலின் பிரிவால் பேரலைபோல் எழும் நாயகனின் உளவியல் சிக்கலையும் தன் தாயின் வழியாகப் பெருக்கெடுத்த சமூக அக்கறை அவனுக்குக் கொடுத்த லட்சியத்தையும் ஒரு புள்ளியில் அட்டகாசமாக இணைத்திருக்கிறது.
பட்டப் படிப்பை முடித்த பிறகு சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்திலிருந்து சென்னை நகரத்துக்கு வருகிறான் சத்யா (விது என்கிற வித்யாஷங்கர் நீலமேகம். ஆமாம்! ‘ஜிகர்தண்டா XX’ படத்தில் ‘செட்டானி’யாக வருவாரே அவரேதான்). தன்னுடன் படித்தவர்களும் தன் வயதுக்காரர்களும் திருமணமாகி வாழ்வைக் கொண்டாடும்போது சத்யாவுக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன?
நல்ல உயரமும் தோற்றமும் இருந்தும் கூட சென்னையில் எந்தப் பெண்ணும் இவனை நோக்கித் திரும்பாத நாள்கள் ஒவ்வொன்றும் அவனுக்கு வெங்கோடையாகவே நகர, அவனது வாழ்க்கைக்குள் வெக்கைக்கு நடுவில் உடைந்து கொட்டும் ஒரு மழை நாளைப் போல் நுழைகிறாள் விஜி ( ‘அயோத்தி’ புகழ் ப்ரீத்தி அஸ்ராணி).
ஆத்மார்த்தத் தோழியாகவும் ஒரு கட்டத்தில் காதலியாகவும் மாறும் விஜியின் வாழ்க்கை லட்சியம் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெல்வது. இவர்களின் காதல் தன்னுடைய எல்லாக் கவித்துவ, அழகியல் தருணங்களையும் எதிர்கொண்டாலும் ஒரு கட்டத்தில் எதற்காக வாழ்க்கை வாழ்கிறோம் என்கிற ‘லட்சியவாத’ இருத்தலியல் பிரச்சினைக்குள் சிக்கி மூச்சுத் திணறுகிறது.
விஜி எடுக்கும் எதிர்பாராத முடிவால் சத்யாவை பிரிந்து செல்கிறாள். விஜி இல்லாத வாழ்க்கையால் பெரும் வெறுமைக்குள் சிக்கி அல்லாடும் ஆளாகும் சத்யாவுக்குள் எரியும் பிரிவின் தீயைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் அதிலிருந்து தப்பிக்க அவன் ஒரு பெரும் ‘வெடி’ப்பாக மாறுகிறான். அவனுடைய இந்தப் பரிமாணம் உருவாக்கும் தொடர் விளைவுகள்தான் மீதிப் படம்.
ஒரு தொழில்நுட்பப் பட்டதாரிக்குப் படித்த படிப்புக்கான வேலை கிடைக்காமல், எதற்கும் இருக்கட்டும் என்று படித்த ஒரு பட்டயப் படிப்பால் சொற்பச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்வதில் தொடங்கி, சத்யாவின் உதவி இயக்குநர் நண்பன், வேலை தேடிக்கொண்டே இருக்கும் மற்றொருவன், தொடக்கத்தில் வரும் மேன்சன் வாழ்க்கை, மொட்டை மாடி வாழ்க்கை என 2000-ன் சென்னைக் காலத்தில் பல 90-களின் குழவிகளுக்கு இப்படம் நினைவேக்கத்தை உருவாக்கும்.
சத்யா கதாபாத்திரம் கொண்டிருக்கும் கடந்த காலக் காயங்கள், அதிலிருந்து மீண்டு சென்னையில் வாழும் அவனுக்குள் காதல் உருவாக்கும் புத்துணர்ச்சி, பின்னர் காதலின் தீயைச் சுமந்து அவன் ஒரு போராளியாக உருவெடுப்பது, எதிரிகளின் சிலந்தி வலையில் சிக்கி மீண்டு வருவது என ஒரு முழுமையான புத்தாயிரத்தின் இளைஞர் பிரதியை நாயகனாகப் படைத்திருக்கிறார் இயக்குநர்.
அந்தக் கதாபாத்திரத்துக்கு விது கொடுத்திருக்கும் நடிப்பு அவ்வளவு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. சமூக செயற்பாட்டாளர்கள் பியூஸ் மனுஷ், விமல் ராகவன் ஆகிய இருவரையும் சத்யா கதாபாத்திரம் நினைவூட்டுகிறது. சத்யாவின் போதாமைகளை வழிகாட்டிகள் இல்லாத முதல் தலைமுறை பட்டதாரியாகச் சித்தரித்திருப்பதும் பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களுக்கு வலிமிகுந்த நினைவூட்டல்.
சென்னையில் வாழும் காலத்தின் சத்யாவின் வயதை முன்னிறுத்தியே படத்துக்குத் தலைப்பு வைத்திருந்தாலும் அவன் ஒரு சமூகப் போராளியாக உருமாற்றம் அடைய விஜி கதாபாத்திரம் அவனுக்குத் தரும் நேரடித் தூண்டுதலே காரணமாக அமைகிறது. இந்த இடத்தில் ‘ரெனே’ கதாபாத்திரத்தை நினைவுகூர்வது இனிமையானதாக இருக்கும்.
ரெனேவின் மிகச்சிறந்த பண்பு அவளது தெளிவு. அவள் தனது கடந்த காலத்தைப் பற்றியோ, தனது அடையாளத்தைப் பற்றியோ எந்தத் தாழ்வு மனப்பான்மையும் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக, காதல் மற்றும் உறவுகளில் அவளுக்கு இருக்கும் முதிர்ச்சி அபாரமானது. இனியன் உடனான மோதல்களில், அவள் தன்னைத் தற்காத்துக் கொள்வது அவளது அக வலிமையை எடுத்துக்காட்டியது.
அதேபோல், சமூக சாதி அடுக்கில் கலை வழியாக ஒடுக்குதலிலிருந்து மீண்டவளாகவும் தன் பெண்மையை அம்பேத்கரியச் சிந்தனைகளின் வழியாக மேம்படுத்திக்கொண்டவளாக அவள் சித்தரிக்கப்பட்டாள். “நான் ஏன் என்னுடைய பெயரை மாற்றிக் கொண்டேன்?” என்று ரேனே விளக்கும்போதும் தனது விருப்பமான இசையமைப்பாளர் குறித்த தேர்வை ஆண் மைய அச்சமின்றிக் கூறுவதாகட்டும் அவளது அவளது ஒவ்வொரு அசைவும் அசலான பெண்ணிய அரசியல் சார்ந்தது.
அதேபோல், இனியனிடம் காதல் ஒத்திருந்தபோதும் அவனையும் அறியாமல் அவனுக்குள் ஊறிப்போயிருக்கும் சாதிப் பார்வையை அவள் ஒருபோதும் சகித்துக் கொள்ளவில்லை. காதலை விடத் தனது சுயமரியாதை மேலானது என்பதைக் காட்டும் ரெனே, மற்றவர்களை எடுத்தெறியும் ஒருத்தியாக இல்லாமல், தன்னைப் புரிந்துகொள்வதற்கான அவகாசத்தையும் அவள் வழங்குகிறாள். அவள் விரும்பும் கலைஞர்கள், வாசிக்கும் புத்தகங்கள், அவளுடைய உரையாடல்கள் என அனைத்தும் அவளை ஓர் அறிவு ஜீவியாகச் சித்தரித்தன.
ரெனே எப்படிக் காதலை ஓர் அதிகாரப் போட்டியாகப் பார்க்காமல் சுயமரியாதைக்கான களமாகப் பார்த்தாளோ, அதேபோல் விஜி காதலை ‘தேக்கநிலை’யாகப் பார்க்க மறுக்கிறாள். சத்யா தன் மீதான காதலிலேயே உழன்று கொண்டிருப்பதை அவனது வீழ்ச்சியாகவே அவள் கருதுகிறாள். ‘காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல’ என்கிற அவளது தெளிவு, ஒரு பெண்ணின் இருப்பு என்பது ஆணைச் சார்ந்து மாய்வதல்ல, மாறாக ஆணை மேம்படுத்துவது என்பதைத் தன் பிரிவை அவனுக்குக் கொடுத்து உணர்த்துகிறாள்.
ரெனே தனது அடையாளத்தை (பெயர் மாற்றம் உட்பட) எப்படித் தீர்மானித்தாளோ, விஜி அவளைவிட ஒருபடி மேலே போய் தனது உடலின் மீதான அதிகாரத்தை இன்னும் மேன்மையோடு கையாள்கிறாள். காமம் என்பது ஒரு புனிதமான தளை அல்லது உய்த்துணர முடியாத ரகசியம் அல்ல என்பதை சத்யாவுக்கு உணர்த்த, தன்னை அவனுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் ‘செக்ஸ்’ மீதான அந்த ‘மிஸ்டிக்’ தன்மையை உடைக்கிறாள். செக்ஸ் என்பது ஒரு சிறிய புள்ளிதான் என்பதை உணர வைத்து, அவனை அந்த ‘ட்ரோமா’விலிருந்து (Trauma) விடுவிக்கும் அவளது செயல், தமிழ் சினிமாவில் அரிதான ஒரு ‘ரேடிக்கல்’ அணுகுமுறை.
ரெனே எப்படி இனியனுக்குச் சமூக அடுக்கின் பாலின மற்றும் சாதியமற்ற சமத்துவ அரசியலைக் கற்றுக்கொடுத்தால் என்றால், சத்யாவுக்கு அவனை உணரக் கற்றுக்கொடுக்கிறாள். ஒரு சாதாரண இளைஞனாகக் காதலின் விரல் பிடித்துக் கிடந்தவனை ஒரு சமூகப் போராளியாக உருமாற விஜி, சத்யாவின் முகத்துக்கு நேராகப் பிரிவை அறிவித்து அவனை அனுப்புவதும் காதல் உடல்கள் இணைவதைக் கடந்த ஒன்று என்பதை உணர்த்துவதும் சத்யாவின் ஆற்றலைத் தூண்டி, ஒரு தனிநபர் மீதான ஈர்ப்பிலிருந்து சமூக அக்கறை நோக்கிய பெரும் தொண்டனாக அவனைத் திசைதிருப்புகிறது.
ரெனே தன் காதலில் இடைவெளிகளையும் உரையாடல்களையும் கோருவது போலவே, விஜி தனது பிரிவின் மூலம் சத்யாவை நொறுக்கி பின் அவனை மீண்டும் உருவாக்கும் ஒருத்தியாக மாறுகிறாள். அவள் தரும் பிரிவு தண்டனை அல்ல, அது சத்யாவுக்கான ஒரு திறப்பு. அந்தப் பிரிவின் வலிதான் அவனைச் சமூகத்தின் வலிகளையும் உணரச் செய்யும் ஒரு கருவியாக மாறுகிறது.
ரெனே ‘சுயமரியாதை மற்றும் அடையாளத்தின்’ குறியீடு என்றால், விஜி ‘லட்சியம் மற்றும் விடுதலையின்’ குறியீடு. இருவரும் ஆண்களின் குறுகிய உலகப் பார்வையை உடைத்து, அவர்களை விசாலமான சமூக வெளிக்கு இட்டுச் செல்கிறார்கள். ரெனே கருத்தியல் ரீதியாக ஒருவனைச் செதுக்குகிறாள் என்றால், விஜி உளவியல் ரீதியாக ஒருவனைச் சமூகப் போராளியாகக் கட்டமைக்கிறாள்.
பின்னர் அவளே காதலின் வலியில் தன் லட்சியத்தில் தடுமாறி நிற்கும்போது, அவள் சத்யாவிடம் பற்ற வைத்த நெருப்பின் ஒரு பகுதியைத் திரும்பப் பெற்றுக்கொள்வது ஆண்பெண் சமத்துவ வாழ்க்கை என்பதே கொடுக்கலும் வாங்கலும்தான் என்பதைக் கவித்துவ அழகுடன் ‘29’ திரைப்படம் சித்தரிக்கிறது.
அதேநேரம், சத்யாவுக்கும் விஜிக்குமான 8 வயது வேறுபாடு என்பது நாயகியின் தோற்றத்துக்காகப் பொருத்திக்கொண்டதாக இருந்தாலும் நாயகனைவிடக் குறைந்த வயது கொண்டவளின் முதிர்ச்சியையும் ஒரு கட்டத்தில் காதலின் வலியில் தடுமாறும் அவளது வீழ்ச்சியும் அவ்வளவு நெகிழ்வுத் தன்மையுடன் சித்தரித்திருப்பது ‘விஜி’ என்கிற எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை நமக்கு இன்னும் அன்னியோன்னியமாக மாற்றுகிறது.
வேற்றுமொழியைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் ‘சிங்கிள் பேரண்டிங்’ சிக்கலோடு தந்தையைப் பிரிந்து வாழும் ஒரு தமிழ்ப் பெண்ணின் கதாபாத்திரத்தை மிக அழகாகவும் முதிர்ச்சியுடன் தன் நடிப்பால் தூக்கி நிறுத்தியிருக்கிறார் ப்ரீத்தி அஸ்ராணி.
திரைக்கதையில் சத்யாவுக்கும் அவனுடைய அம்மாவுக்குமான உறவு நிலையில் நீடிக்கும் உணர்வுச் சிக்கலைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். சத்யாவின் நண்பர்களாக வருபவர்களைக் கதைக்களம் மற்றும் கதை நடக்கும் காலத்தை ஒட்டிய மென் நகைச்சுவைக்கும் கதை நகர்வுக்கும் பயன்படுத்தியிருப்பதையும் பாராட்டலாம்.
சத்யா தன்னுடைய மைண்ட் வாய்ஸுக்கு ‘சீலே’ எனப் பெயர் வைத்திருப்பது, போகிற போக்கில் காப்பி கேட் ‘கஜினி’ ஏ.ஆர். முருகதாஸுக்கு ஒரு குத்துவிடுவது, ‘உங்கிட்ட ஒரு நிதானம் வந்திருக்குப்பா..’ என்று சத்யாவிடம் அப்பா சொல்லுமிடம், ;ஒரு தலை ராகம்’ படத்தின் ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்துச்சாம் சோகக் கதையை நினைவூட்டும் சத்யாவின் சினிமாக்கார நண்பன், சற்றும் எதிர்பாராத ஒரு பயோடேட்டாவுடன் அலையும் மற்றொரு நண்பனின் தோழியுடன் செய்யும் வீடியோ சாட்கள், படத்தின் இடைவேளை முடிச்சில் வந்துபோகும் ‘மலர் டீச்சர்’ எஃபெக்ட், ‘இடியாப்பம்..’ என்கிற மாநகரத்தின் நிகழ்காலக் குரல் உள்படம் 2கே கிட்களையும் ஜென் இசட் கிட்களையும் மகிழ்வூட்டும் விஷயங்கள் படத்தில் கொட்டிக்கொடப்பதுபோலவே படம் நிறையக் கொடுத்தும் அனுப்புகிறது.
இப்படத்தில் பல்லிளிக்கும் ஒரு பலகீனமான அம்சம் வில்லன். தமிழ் சினிமா பார்த்துப் பழகிய வார்ப்பாகவே இருப்பது பலகீனம். இவ்வளவு சிறந்த திரைமொழியைக் கையாண்ட இயக்குநர் அதை இன்னும் சற்று மாற்றி அமைத்திருக்கலாம்.
இந்தக் குறையைக் கடந்து, ஒரு சராசரி இளைஞனின் அகவயமான தேடலையும், புறவயமான சமூகப் போராட்டத்தையும் இணைக்க முயலும் திரைமொழியில் முதன்மைக் கதாபாத்திரங்களையும் பெரும்பாலான துணைக் கதாபாத்திரங்களையும் சுதந்திரமும் தேடலும் தவிப்பும் இழப்பும் மீட்சியும் மிகுந்தவையாகப் படைத்து, அவற்றை அழகுணர்ச்சியுள்ள காட்சிகள் வழியாக நடமாட விட்டு, ஷான் ரோல்டனின் அட்டகாசமான பாடல்கள் மற்றும் இசையின் வழியாக ஏமாற்றம் அளிக்காத திரை அனுபவத்தைத் தந்துவிடுகிறது இந்த ‘29’ வயது இளமை.